கொழும்பு: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி பிப்ரவரி 15 அன்று நடைபெற உள்ள நிலையில், பாகிஸ்தான் அணியின் ஒரு வீரர் இந்திய அணிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளார். பாபர் அசாம், முகமது ரிஸ்வான் போன்ற நட்சத்திர வீரர்களை விட, இந்த வீரரை சமாளிப்பதுதான் இந்திய அணிக்கு, குறிப்பாக ஜஸ்பிரித் பும்ராவுக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் அணியின் 29 வயதான தொடக்க வீரர் சாஹிப்சதா ஃபர்ஹான், இந்தியாவுக்கு எதிராக அதிக போட்டிகளில் விளையாடியது இல்லை. கடந்த ஆண்டு துபாயில் நடைபெற்ற டி20 ஆசியக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக 3 போட்டிகளில் மட்டுமே அவர் விளையாடியுள்ளார்.
ஆனால், அந்த மூன்று போட்டிகளிலுமே இந்திய பந்துவீச்சை சிதறடித்துள்ளார். முறையே 40, 58 மற்றும் 57 ரன்களை அவர் குவித்துள்ளார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், அவர் அடித்த 155 ரன்களில் 63 சதவீதத்திற்கும் அதிகமான ரன்கள் பவுண்டரிகள் மூலமே வந்துள்ளன. 11 ஃபோர் மற்றும் 9 சிக்ஸர்களை அவர் விளாசியுள்ளார்.

உலகம் முழுவதும் உள்ள பேட்ஸ்மேன்கள் ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சை எதிர்கொள்ளத் திணறும் நிலையில், சாஹிப்சதா ஃபர்ஹான் அவரை மிகவும் எளிதாக எதிர்கொண்டு ரன்களைக் குவித்துள்ளார். கடந்த ஆசியக் கோப்பையில் பும்ராவுக்கு எதிராக பவர் பிளே ஓவர்களில் இவர் காட்டிய ஆதிக்கம் இந்திய அணிக்கு பெரும் தலைவலியைக் கொடுத்துள்ளது.
பும்ரா வீசிய 8 ஓவர்களில் மட்டும் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களை விளாசித் தள்ளியுள்ளார். டி20 கிரிக்கெட் வரலாற்றில், பும்ராவுக்கு எதிராக ஒரு போட்டியில் 3 சிக்ஸர்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ஃபர்ஹான் படைத்தார். சர்வதேசப் போட்டிகளில் 6.52 என்ற எகானமி ரேட் வைத்துள்ள பும்ராவுக்கு எதிராக, ஃபர்ஹான் 150க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் குவித்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பும்ராவுக்கு எதிராக ஃபர்ஹான் மிகவும் எளிமையான ஒரு திட்டத்தையே வைத்துள்ளார். தேவையில்லாத ஷாட்களைத் தவிர்த்துவிட்டு, தனது பலம் என்ன என்பதை உணர்ந்து விளையாடுகிறார். பந்துவீசும்போது பும்ராவை நோக்கி நேராக அடிப்பதுதான் அவரது முக்கிய யுக்தியாக உள்ளது. பந்து வரும்போது தனது இடது காலை சற்று நகர்த்திக்கொண்டு, பந்தை நேராக தரை வழியாகவோ அல்லது சிக்ஸருக்கோ விரட்டுகிறார்.
நமீபியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பும்ராவை பவர் பிளே ஓவர்களில் பயன்படுத்தவில்லை. ஆனால், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தத் திட்டம் மாறுபடலாம். கொழும்பு பிரேமதாசா மைதானம் சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், பும்ரா மற்றும் ஃபர்ஹான் இடையேயான இந்த மோதல் போட்டியின் போக்கையே தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும்.
கடந்த முறை தன்னை அடித்து நொறுக்கிய ஃபர்ஹானுக்குப் பும்ரா எப்படிப் பதிலடி கொடுக்கப் போகிறார் என்பதைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஒரு பவுண்டரியைக் கூட விட்டுக்கொடுக்க விரும்பாத பும்ராவுக்கும், பும்ராவை வெளுத்து வாங்கும் ஃபர்ஹானுக்கும் இடையேயான இந்த மினி யுத்தம், இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் முக்கிய அம்சமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஃபர்ஹானுடைய விக்கெட் இந்தப் போட்டியில் திருப்புமுனையாக இருக்கும்.