மும்பை: இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை லீக் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெறுகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான போர் பதற்றத்திற்கு பிறகு இரு அணிகளும் கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக மோதுகிறது. இதனால் இந்த போட்டி தொடர்பான பரபரப்பு ரசிகர்கள் மத்தியில் தொற்றிக் கொண்டுள்ளது.
நடப்பு டி20 உலக சாம்பியன் ஆன இந்திய அணி கடந்த 2024 உலக கோப்பைக்கு பிறகு 21 போட்டிகளில் 18 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. அது மட்டும் இல்லாமல் இந்த தொடரின் தொடக்கத்தில் யுஏஇ அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறார்கள். அதே சமயம் பாகிஸ்தான் அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற முத்தரப்பு தொடரை வென்று ஆசிய கோப்பைக்கு வந்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வசிம் அக்ரம், "இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி மிகவும் சவால் நிறைந்ததாக இருக்கும். இரு அணிகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்திய அணி நன்றாகவும் பலமான அணியாகவும் இருக்கின்றது."
"இரு அணிகளில் வீரர்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால், இந்தியாவே பலமாக தெரிகிறது. ஆனால் பாகிஸ்தான் அணிக்கு நம்பிக்கை அதிகரித்து இருக்கிறது. ஏனென்றால் அவர்கள் இதே நாட்டில் நடைபெற்ற முத்தரப்பு தொடரில் விளையாடிவிட்டு ஆசிய கோப்பை தொடருக்கு உத்வேகத்துடன் வந்திருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் பாகிஸ்தான் அணி இளம் வீரர்களை கொண்ட அணியாக இருக்கின்றது."
"நல்ல கேப்டன் கிடைத்திருக்கிறார். சிறந்த பயிற்சியாளர் உள்ளார். எனவே இந்த அணி பலமான அணியாக உருவாக சில காலம் தேவைப்படும். ஆனால் நாம் எப்போதுமே வேகமாக முடிவுகள் வேண்டும் என்று நினைப்போம். அது நடக்காது பாகிஸ்தான் அணியில் இன்னும் சில பிரச்சனைகள் இருக்கின்றது. முகமது ஹாரிஸ் இன்னும் தனது பார்மை கண்டுபிடிக்கவில்லை."
"இதேபோன்று தொடக்க வீரராகவும் அவர் களமிறங்கவில்லை. எனவே அவரை எங்கே பேட்டிங் செய்ய வைப்பது என்ற குழப்பம் இன்னும் நீடிக்கின்றது. இதேபோன்று பாகிஸ்தான் அணியில் இரண்டு பார்ட் டைம் பவுலர்கள் தான் ஐந்தாவது பவுலருக்கான கோட்டாவை நிறைவேற்றுவார்கள் என்பது கொஞ்சம் கடினமான விஷயம் தான்."
"ஏனென்றால் பார்ட் டைம் பவுலர்கள் ரன்களை அதிக அளவு விட்டுக் கொடுக்கும் அபாயம் இருக்கின்றது. இந்திய அணியை பொறுத்தவரை வருண் சக்கரவர்த்தி இருவருமே அபாரமாக பந்து வீசுகிறார்கள். இருவரையும் எதிர்கொள்வது என்பது மிகவும் கடினமாக இருக்கும். அது மட்டுமில்லாமல் உலகில் மிகச்சிறந்த பவுலரான பும்ராவும் இருக்கின்றார். எனவே பேட்ஸ்மன்களுக்கு அது அழுத்தத்தை கொடுக்கும்" என்று வசிம் அக்ரம் கூறியுள்ளார்.