துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகம் அடைய வைத்திருக்கிறது. ஆனால் கடந்த சில காலமாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியே ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்த சூழலில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் அகமது சேஷாத் ஐடியா ஒன்றை வழங்கி இருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இந்திய அணியில் மிகப்பெரிய பலமே அவர்களுடைய பேட்டிங் வரிசையில் இருக்கும் டாப் 4 வீரர்கள் தான்.

இந்த நான்கு வீரர்களும் 35 முதல் 40 ஓவர் வரை விளையாடினால் கதை முடிந்தது. ஆனால் இந்த நான்கு வீரர்களும் முதல் 15 ஓவர்களுக்குள் ஆட்டம் இழந்து விட்டால், அதன் பிறகு ஆல்ரவுண்டர்கள் தான் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் இருக்கிறார்கள். டி20 போட்டிகளில் வேண்டுமானால் ஆல் ரவுண்டர்கள் பேட்டிங் வரிசையில் இருப்பது பயன் கொடுக்கும்.
ஆனால் ஒரு நாள் கிரிக்கெட்டுக்கு சரி வராது. ரோகித் சர்மா பேட்டிங் வரிசையில் பலப்படுத்த வேண்டும் என்பது குறித்து பேசி வருகிறார். ஆனால் ஒரு நாள் கிரிக்கெட்டில் விக்கெட்டுகளை நீங்கள் விரைவில் இழந்தால், அதன் பிறகு வரும் வீரர்கள் தங்களுடைய இன்னிங்சை திட்டமிட்டு கட்டமைக்க வேண்டும். இதன் மூலம் நாம் நினைத்த இலக்கை எட்ட முடியும். இதற்கு பேட்ஸ்மேன்களால் மட்டுமே முடியும்.
ஆல் ரவுண்டர்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வு இருக்காது. பாகிஸ்தான அணி முதல் மூன்று விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்தி இந்தியாவுக்கு பன்ச் வைக்க வேண்டும். அதை செய்தாலே மிகப்பெரிய பணி முடிந்து விட்டது என அர்த்தம். இங்கிலாந்துக்கு எதிராக மூன்றாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி ஒரு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இது போன்ற இன்னிங்ஸ் விளையாடினால் விராட் கோலி ஃபார்முக்கு திரும்பி விடுவார். அவர் ஒரு ஸ்பெஷல் வீரர். பெரிய போட்டிகளில் மேஜிக் இன்னிங்ஸை விளையாடி போட்டியை வெற்றி பெற வைப்பார். கடந்த முறையும் கோலி இவ்வாறு தான் பாகிஸ்தானிடம் இருந்து வெற்றியை பிடுங்கினார் என்று அகமது சேஷாத் கூறியுள்ளார்.