துபாய்: சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதிய ஆட்டத்தில் ஒரு ரூசிகர சம்பவம் நடைபெற்றது. உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இந்த போட்டியை எதிர்நோக்கி பார்ப்பதால் களத்தில் எப்போதுமே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
சில நேரத்தில் வீரர்கள் கொஞ்சம் எல்லை மீறி நடந்து கொள்வார்கள். இன்றைய ஆட்டத்தில் கூட பாபர் அசாமை அவுட் ஆக்கிய பிறகு ஹர்திக் பாண்டியா அவருக்கு பை பை காட்டி வெறுப்பேற்றினார். இதேபோன்று கில்லை ஆட்டம் இழக்க செய்த பாகிஸ்தான் பவுலர் அப்ரார் அகமத் களத்தை விட்டு வெளியே போ என்று கண்களால் சைகை காட்டினார்.

அந்த வகையில் மேலும் ஒரு சம்பவம் நடைபெற்றது. பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போதுதான் ஹர்ஷித் ரானா, பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வானும் மோதிக்கொண்டனர். பாகிஸ்தான் அணி 47 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்த நிலையில் மூன்றாவது விக்கெட் ரிஸ்வான் மற்றும் சவுத் சகில் ஆகியோர் ஜோடி சேர்ந்து ரன்களை சேர்த்தனர்.
அப்போது ரிஸ்வான் நிதானமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்க முயன்றார். போட்டியின் 21 வது ஓவரில் தான் இந்த நிகழ்வு நடைபெற்றது. ஹர்ஷித்ராணா பந்து வீசிய பிறகு அதனை ரிஸ்வான் டீப் ஸ்கொயர் லெக் பக்கம் அடித்து விட்டு ரன் ஓடினார். அப்போது ஹர்ஷித் ராணா நின்று கொண்டிருக்க முகமது ரிஸ்வான் வேண்டுமென்றே அவர் மீது மோதி சென்றார்.
இது தெரிந்தே நடைபெற்றது போல் தான் இருந்தது .இதனால் கடுப்பான ஹர்ஷித் ரானா ஏன் என்னை இடுத்தீர்கள் என கையை காட்டி செய்கையால் கேட்டார். ஆனால் ஹர்ஷித் ரானா இளம் வீரர் என்பதால் ரிஸ்வானுக்கு மரியாதை கொடுத்துவிட்டு அமைதியாக சென்றார். இதனால் எந்த ஒரு சண்டையும் நிகழாமல் இருந்தது.
ஆனால் ரிஸ்வான் மோதியது ஐசிசி விதிக்கு எதிரானது என்பதால் அவர் மீது அபராதம் விதிக்க வேண்டும் என இந்திய ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் ரிஸ்வான் பார்க்காமல் தான் மோதினார் என்றும் ஹர்ஷித் ரானா தான் வேண்டுமென்றே அவருடைய ரன்னை தடுக்கும் விதமாக நடுவில் நின்றார் என்று பாகிஸ்தான் ரசிகர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.