மும்பை: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அரையிறுதி சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்று இருக்கிறது.
இந்த போட்டியில் விராட் கோலி சதம் அடித்தாலும், ஸ்ரேயாஸ் ஒரு முக்கியமான இன்னிங்ஸ் ஆடினார். 67 பந்துகளை எதிர்கொண்ட அவர் 56 ரன்களில் அவுட்டானார். இந்த நிலையில் போட்டிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரேயாஸ், பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியில் தமக்கு முழு திருப்தி இல்லை என்று கூறியிருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர், "நாங்கள் எத்தனை ஓவரில் வெற்றி பெற்றோம் என்று உங்களால் சொல்ல முடியுமா? 45 பந்துகள் தான் எஞ்சி இருந்தது என நினைக்கின்றேன். இதில் எனக்கு திருப்தியே இல்லை. நாங்கள் இன்னும் கொஞ்சம் விரைவாக போட்டியை முடித்து இருக்க வேண்டும்."
"அப்படி செய்திருந்தால் நிச்சயமாக அது எனக்கு திருப்தியை கொடுத்து இருக்கும். புதிய பந்து ஆடுகளத்தில் நன்றாக பேட்டிற்கு வந்தது. ஆனால் அதன்பிறகு பந்து பழையதாக மாறியவுடன் ரன் சேர்க்கவே மிகவும் கடுமையாக இருந்தது. ஆனால் நாங்கள் கொஞ்சம் அதிரடியாக விளையாடிருந்தால் இன்னும் விரைவாக வெற்றி பெற்று இருப்போம் என நான் நினைக்கின்றேன்."
" பாகிஸ்தான் வீரர்கள் குறிப்பாக ஆட்டத்தின் நடுப்பகுதியில் அபாரமாக பந்து வீசினார்கள். பந்து நன்றாக திரும்பியது. இந்த வெற்றியில் எங்கள் அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் முக்கிய பங்காற்று இருக்கிறார்கள் என நினைக்கின்றேன். பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி எப்போதுமே இனிமையானது."
"ஏனென்றால் கடும் சவால்களும், போட்டியும் நிறைந்திருக்கும். அது மட்டும் இல்லாமல் பெரும் அளவு நெருக்கடி வெளியில் இருந்து எங்களுக்கு வரும். பாகிஸ்தானுக்கு எதிராக இது என்னுடைய மூன்றாவது வெற்றியாகும். கொஞ்சம் ஜாலியாக தான் இருக்கிறது. விராட் கோலி ஒருபோதும் பார்ம் அவுட் ஆக வில்லை."
"நேற்று கூட அவர் எங்களுக்கு முன்பே ஒரு மணி நேரத்திற்கு முன் களத்திற்கு வந்து பயிற்சியில் ஈடுபட்டார். அவருடைய மனது வலிமை தான் அவரின் வெற்றிக்கு காரணமாக இருக்கிறது. ரன்கள் எடுக்க வேண்டும் என்ற பசியில் அவர் எப்போதும் இருப்பார். அவர் என்றுமே ரன் எடுக்க சிரமப்பட்டது கிடையாது என்பது தான் உண்மை" என ஸ்ரேயாஸ் கூறியுள்ளார்.