துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக் ரன் அவுட் ஆனதற்கு கிண்டல் செய்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. துபாயில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனை அடுத்து களம் இறங்கிய தொடக்க வீரர் பாபர் அசாம், 23 ரன்களில் ஆட்டம் இழக்க மாற்று வீரராக களம் இறங்கிய இமாம் உல் ஹக், டெஸ்ட் கிரிக்கெட் போல் விளையாடி 26 பந்துகளில் 10 ரன்கள் எடுத்தார்.

அப்போது குல்தீப் வீசிய ஆட்டத்தில் பத்தாவது ஒவரில், இமாம் உல் ஹக் அடித்த பந்து அக்சர் பட்டேலிடம் மிட் ஆப்பில் சிக்கியது. வேகமாக ஓடிய இமாம் உல் ஹக்கை அக்சர் பட்டேல் ரன் அவுட் ஆக்கினார். இதன் மூலம் பாகிஸ்தான் அணி இரண்டாவது விக்கெட்டை இழந்தது. இந்த நிலையில் இமாம் உல் ஹக்கின் மாமா தான் இன்சமாம் உல் ஹக்.
ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இந்த சூழலில் இமாம் உல் ஹக் இதுவரை 71 இன்னிங்ஸில் விளையாடி ஆறுமுறை ரன் அவுட் ஆகி இருக்கிறார். இதுபோல் இவருடைய மாமாவான இன்சமாம் 46 முறை ரன் அவுட் ஆகி இருக்கிறார். இன்சமாம் கொஞ்சம் உடல் பருமனாக இருப்பதால் அவரால் சரியாக ஓட முடியாது என்று விமர்சனம் அப்போதிலிருந்து இருந்து வருகிறது
இதனால் பல கேலி கிண்டலுக்கு அவர் ஆளாகி இருக்கிறார். இந்த சூழலில் இன்சமாம் உல் ஹக்கை, இமாம் உல் ஹக்குடன் ஒப்பிட்டு ரவி சாஸ்திரி கிண்டல் செய்தார். இருவருக்கும் ஓடுவதில் ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா? குடும்பத்திலிருந்து வந்ததா என அவர் கேட்டார்.
இதற்கு பதில் அளித்த வசிம் அக்ரம், நான் ஏதாவது சொன்னால் இன்சமாம் என்னை தவறாக நினைத்துக் கொள்வார். என்னைக் கேட்டால் நிச்சயம் அப்படியும் இருக்கலாம் என்று நினைக்கின்றேன். ஆனால் இந்த பட்டியலில் நானும் இடம் பெறுவேன். ஏனென்றால் நானும் சிறந்த ரன்னர் கிடையாது. இமாம் உல் ஹக் ரன் அவுட் ஆனது தற்கொலைக்கு சமம். அங்கு ரன் ஓடும் தேவையே இல்லை. நல்ல பந்துகளை எதிர்கொண்டு ரன் அடிக்கும் நேரத்தில் இமாம் உல் ஹக் தவறை செய்து விட்டார் என்று வசிம் அக்ரம் கூறினார்.
இதற்கு கவாஸ்கர், நீங்கள் குடும்பத்தில் ஏதும் ரன் ஓடுவதில் சிக்கல் பின்னணி இருக்கிறதா என்று தானே கேட்டீர்கள் என்றார். அதற்கு ஆம் என பதில் அளித்த ரவி சாஸ்திரி, இருவருமே அதிகமாக ரன் அவுட் ஆகிறார்களே, இதனால் குடும்பத்தில் இருந்து வந்ததா என கேட்டேன் என்று கூறினார். இதற்கு பதில் அளித்த சுனில் கவாஸ்கர், இது குடும்பத்தில் (டிஎன்ஏவில்) ஓடுவது போல் தெரியவில்லை. ஏனென்றால் இந்த குடும்பத்தாலே ஓடவே முடியாது என்று கூறினார். கவாஸ்கரின் இந்த பேச்சு சச்சரவை ஏற்படுத்தியிருக்கிறது.