துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விராட் கோலி சதம் விளாசி இருந்தார். இதன் மூலம் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. விராட் கோலி சதம் அடித்த பிறகு நான் இருக்கிறேன் என்று ட்ரெஸ்ஸிங் ரூம்மை பார்த்து கையை காட்டி கொண்டாடினார் என முதலில் நினைக்கப்பட்டது.
ஆனால் தற்போது தான் தெரிய வந்தது. விராட் கோலி டிரெஸ்ஸிங் ரூம் நோக்கி கை காட்டவில்லை, அவருடைய சிறுவயது பயிற்சியாளர் ஆன ராஜ்குமார் சர்மாவை பார்த்து தான் கைகாட்டி இருக்கிறார்.

இது குறித்து விராட் கோலியின் சிறு வயது பயிற்சியாளரான ராஜ்குமார் சர்மா பேசுகையில், "விராட் கோலி தான் தமக்கு இந்த போட்டிக்கான டிக்கெட்டை பெற்றுக் கொடுத்தார். அது மட்டும் இல்லாமல் , அவர் தங்கி இருக்கும் ஹோட்டலில் தான் நானும் தங்கி இருக்கின்றேன். எனவே நான் அங்கு தான் இருக்கிறேன் என்று விராட் கோலிக்கு நன்றாக தெரியும். அவர் என்னை பார்த்து கொண்டாடியது என்னால் மறக்க முடியாது."
"ஒரு பயிற்சியாளராக இதைவிட திருப்தியும் பெருமையும் வேறு எதில் இருக்கிறது. விராட் கோலி மீது எப்போதுமே அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. ஒவ்வொரு போட்டியிலும் விராட் கோலி இந்திய அணிக்காக வெற்றியை பெற்றுத் தர வேண்டும். அதிக ரன்கள் அடிக்க வேண்டும் என நினைக்கிறார்கள். இதை அவர் எண்ணற்ற முறையில் நாட்டுக்காக செய்து இருக்கிறார். இந்தியாவின் மிகப்பெரிய மேட்ச் வின்னராக விராட் கோலி இருக்கின்றார்."
"கோலியைத் தவிர வேறு யாரும் இந்தியாவுக்காக இவ்வளவு போட்டிகளை வென்று கொடுத்திருப்பார்களா என்று எனக்கு தெரியவில்லை. கோலி சில போட்டிகளில் ரன் அடிக்கவில்லை என்றால், உடனே அவர் தடுமாறுகிறார் என்றெல்லாம் நினைக்கிறார்கள். அப்படி கிடையாது விராட் கோலியின் கிளாஸ் எப்போதுமே இருக்கும்."
"ஆனால் ஃபார்ம் என்பது ஏற்றம் இறக்கமாகத்தான் இருக்கும். சில நேரம் நாம் நல்ல பந்துகளை எதிர் கொண்டு ஆட்டம் இழக்க நேரிடும். விராட் கோலியும் மனிதர் தான் என்பதை மறந்து விட வேண்டாம். விராட் கோலி கிரிக்கெட்டை விட்டு சென்று விடுவார் என்று சொல்வதெல்லாம் வதந்தி. அவரிடம் இன்னும் நிறைய கிரிக்கெட் எஞ்சி இருக்கிறது. அவருடைய உடல் மொழியை பாருங்கள். அவருடைய உடல் தகுதி திறனை எல்லாம் பாருங்கள்."
"அதை எல்லாம் யாரிடமும் தற்போது ஒப்பிட்டு பார்க்க முடியாது. விராட் கோலி வயது ஆகிய பின் கொஞ்சம் பக்குவமும் கூடி இருக்கிறது. அவர் ஆரம்பத்தில் கொஞ்சம் ஆக்ரோஷமாக இருப்பார். தற்போதும் அப்படித்தான் இருக்கின்றார். ஆக்ரோஷமாக இருப்பது அவரின் பலம்.ஆனால் கோலி சாதாரண குடும்பத்தில் இருந்து விராட் கோலி வந்தவர். விராட் கோலி போட்டிருக்கும் டாட்டூஸ், ஹேர்ஸ்டைல் எல்லாம் பார்க்கும் போது அவர் அடாவடியான இளைஞர் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் கோலி அப்படி கிடையாது".
"அவரிடம் பேசி பழகினால் மட்டுமே அவர் எவ்வளவு இனிமையான மனிதன் என்று உங்களுக்கு தெரியும். அனைவருக்கும் மரியாதை கொடுப்பார். விராட் கோலிக்கு தற்போது கடவுள் பக்தி அதிகமாகிவிட்டது. திருமணம், குழந்தைகளுக்குப் பிறகு விராட் கோலி கொஞ்சம் மாறி சாந்தமாகி இருக்கிறார் என்பது உண்மைதான். சிலர் கோலிக்கு எதிராக தவறான கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். ஆனால் தற்போது ஒட்டுமொத்த தேசமே விராட் கோலிக்கு வாழ்த்து சொல்லி வருகிறது" என்று ராஜ்குமார் சர்மா தெரிவித்துள்ளார்.