சென்னை: அகமதாபாத் கிரிக்கெட் ரசிகர்கள் பாகிஸ்தான் அணி வீரர்களிடம் அத்துமீறிய நிலையில், சென்னை கிரிக்கெட் ரசிகர்கள் பற்றி சிஎஸ்கே கேப்டன் தோனி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
அகமதாபாத் மண்ணில் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதமாகியுள்ளது. அகமதாபாத் மைதானத்தில் களமிறங்கிய பாகிஸ்தான் வீரர்களை பார்த்து ரசிகர்கள் "ஜெய் ஸ்ரீ ராம்" என்று கோஷம் எழுப்பியது, டாஸ் போட வந்த கேப்டனை கேலி செய்வது, மைதானத்திலும் "ஜெய் ஸ்ரீ ராம்" என்று பாடலை ஒலிக்கவிடுவது என்று பல்வேறு சர்ச்சைகள் விவாதமாகியுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கான மரியாதயை பாகிஸ்தான் அணியினருக்கு அகமதாபாத் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் வழங்கவில்லை என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றன்ர். அந்த வகையில் சேப்பாக்கத்தில் நடைபெற்ற 1999 டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி கடைசி நேரத்தில் வென்ற போட்டிக்கு பின் ரசிகர்கள் அனைவரும் பாகிஸ்தான் அணியினருக்கு எழுந்து நின்று கைதட்டிய வீடியோ ட்ரெண்டாகி வருகிறது.
தமிழர்களுக்கு என்று தனித்துவ குணமுண்டு என்று பலரும் அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். எதிர் நாடாகவே இருந்தாலும் நமது மண்ணில் விளையாடுவோருக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு மற்றும் சென்னை கிரிக்கெட் ரசிகர்கள் பற்றி தோனி என்ன பேசி இருக்கிறார் என்பதையும் சேர்த்து பார்க்கலாம்.
2021ஆம் ஆண்டு சென்னையில் சிஎஸ்கே கேப்டன் தோனி பேசுகையில், சென்னை அணியுடனான பந்தம் எனக்கு 2008 ஐபிஎல் தொடரின் போது தொடங்கியது. ஆனால் அதற்கு முன்பாக சேப்பாக்கம் மைதானத்தில் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டேன். ஐபிஎல் ஏலத்தின் போது சிஎஸ்கே அணியால் வாங்கப்படுவேன் என்று நினைக்கவில்லை. அதுதான் தமிழ்நாடு மற்றும் சென்னையின் கலாச்சாரம் பற்றி புரிந்துகொள்வதற்கு வாய்ப்பு அளித்தது.
ஏனென்றால் நான் பிறந்த மண்ணில் இருக்கும் கலாச்சாரம் வேறு மாதிரியான இருக்கும். எனது பெற்றோர் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அதன்பின் அது உத்தரகாண்ட் என்று மாறியது. நான் ராஞ்சியில் பிறந்தேன். அது முதலில் பீகாருடன் இருந்தது. பின்னர் ஜார்க்கண்ட் மாநிலத்துடன் பிரிக்கப்பட்டது. அதன்பின் 18 வயதில் மேற்கு வங்கத்தில் உள்ள கரக்பூர் ரயில்வே-யில் பணியாற்றினேன்.
அதன்பின் தான் சென்னைக்கு வந்தேன். நான் எப்படி இருக்க வேண்டும், விளையாட்டை எப்படி பாராட்ட வேண்டும் என்று தமிழ்நாடு நிறையவே கற்றுக் கொடுத்தது. சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடிய போட்டிகளின் போது ரசிகர்கள் சிறந்த ஆதரவை கொடுத்துள்ளார்கள். ஆனால் வழக்கமாக நமக்கு பிடித்த அணி மட்டுமே சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற மனப்பான்மை ரசிகர்களுக்கு இருக்கும்.
அதேபோல் எதிரணி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். ஆனால் சென்னை மக்கள் அப்படியல்ல. கிரிக்கெட் விளையாட்டை புரிந்து கொண்டு பாராட்டக் கூடிய ரசிகர்கள் தமிழ்நாடு மக்கள் என்று பேசி இருக்கிறார். தோனியின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.