துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் இன்று பல பரிட்சை நடத்துகின்றன. இந்த நிலையில் இறுதி போட்டி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பும்ரா, பாகிஸ்தான் அணி குறித்து தாங்கள் பெரியதாக ஏதும் யோசிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், இந்த தொடர் எங்களுக்கு மிகவும் அற்புதமாக இருந்தது. இது போன்ற பல அணிகள் விளையாடும் தொடரில் ஒரே அணியை மூன்று முறை எதிர்கொள்ளும் சம்பவங்கள் அவ்வளவாக நடைபெறாது.

எனவே இந்த போட்டியை நாங்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி பார்த்துக் கொண்டிருக்கின்றோம். பவர் பிளேவில் பந்து வீசுவது என்பது எனக்கு கொஞ்சம் வித்தியாசமான பணி தான். ஆனால் அணி என்ன சொல்கிறதோ அதை நான் செய்வேன். ஆட்டத்தின் முதல் கட்டத்தில் என்னை பயன்படுத்த விரும்புகிறார்கள். அது எனக்கு புதிய பணி என்றாலும் நான் அதை செய்வேன்.
ஆனால் இதற்கு முன்பு நான் பவர் பிளேவின் அதிகம் பந்து வீசியது கிடையாது என்பது உண்மைதான். இன்னும் சொல்லப்போனால் இந்திய அணிக்கு வந்தபோது 2016-ம் ஆண்டு தான் இதுபோல் பவர் பிளேவில் அதிகமாக பந்து வீசினேன். எனினும் என்னுடைய திறமையை நான் பயன்படுத்தி அணிக்கு உதவ முயற்சி செய்கின்றேன். டி20 கிரிக்கெட்டில் நாம் வாங்கிய பெயர் எல்லாம் ஒன்றுக்கும் பயன் படாது.
அன்றைய நாளில் நாம் எப்படி விளையாடுகிறோம் என்பதில்தான் அனைத்தும் இருக்கின்றது. எங்கள் அணி சிறப்பாக செயல்படுவதற்கு காரணம் ஐபிஎல் தொடர் தான். எங்கள் அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் ஐபிஎல் தொடரில் விளையாடி பழகியவர்கள். இதன் மூலம் அவர்களுக்கு நம்பிக்கை கிடைக்கின்றது.
நாம் நல்ல வீரர்கள். யாரை வேண்டுமானாலும் எதிர்கொள்ளலாம் என்று இளம் வீரர்களால் நம்ப முடிகிறது. அனைத்து போட்டியிலும் ஆரம்பத்தில் இருந்து தான் நாங்கள் ஆரம்பிக்கின்றோம்.நம்பிக்கை கொண்டு நாங்கள் விளையாடுவோம். ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் அதிகளவு நம்பிக்கையுடன் இருப்பது கிடையாது. அதே சமயம் நம்பிக்கை இல்லாமல் களத்திற்கு வருவதும் கிடையாது.
நாங்கள் இறுதி போட்டியில் எங்கள் அணியை பற்றி மட்டும்தான் யோசிப்போம். எங்களுடைய பலம் என்ன? பலவீனம் என்ன? எப்படி பந்து வீசினால் விக்கெட்டுகள் கிடைக்கும் எங்களுடைய காம்பினேஷன் என்ன என்பது குறித்து தான் நாங்கள் யோசிப்போமே தவிர மற்ற அணியின் பலவீனம் என்ன என்பது குறித்து நாங்கள் பார்ப்பது கிடையாது என்று பும்ரா கூறியுள்ளார்.