துபாய்: 2025 ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன. இந்தத் தொடரில் ஏற்கனவே இரண்டு முறை இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளதால், இந்தியாவே கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், வேகப்பந்து வீச்சு ஜாம்பவானுமான வாசிம் அக்ரம், இறுதிப் போட்டிக்கு முன்பாக பாகிஸ்தான் அணிக்குச் சில முக்கியமான ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
மேலும், இந்த இறுதியில் வெற்றிக்கு அதிக வாய்ப்பு உள்ள அணி என்பதையும் கூறி இருக்கிறார். இந்த இறுதிப் போட்டி குறித்துப் பேசிய வாசிம் அக்ரம், இந்திய அணியின் வேகத்தைக் கட்டுப்படுத்த, ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்துவது மிகவும் அவசியம் என்று சுட்டிக்காட்டினார்.

"இறுதிப் போட்டி இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடக்கிறது. நிச்சயமாக இந்தியாதான் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ள அணி (Favourties), ஆனால் எது வேண்டுமானாலும் நடக்கலாம்," என்று தனது பேச்சைத் தொடங்கிய அக்ரம், "பாகிஸ்தான் அணி தங்களது நம்பிக்கையையும், உத்வேகத்தையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் தங்களை நம்பி, புத்திசாலித்தனமான கிரிக்கெட்டை விளையாட வேண்டும்" என்று அறிவுறுத்தினார்.
"பாகிஸ்தான் அணி ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்தினால், அவர்களால் இந்திய அணிக்குப் பின்னடைவை ஏற்படுத்த முடியும். இறுதியில் சிறந்த அணி வெற்றி பெறட்டும் என்று நான் நம்புகிறேன்" என்றும் அவர் கூறினார்.
இந்த ஆசிய கோப்பை தொடரில், இந்திய அணி பாகிஸ்தானை இரண்டு முறையும் எதிர்கொண்டு, இரண்டிலுமே அபார வெற்றி பெற்றுள்ளது. லீக் சுற்றில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. சூப்பர் 4 சுற்றில், மீண்டும் ஒருமுறை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது இந்திய அணி. தோல்வியைச் சந்திக்காத ஒரே அணியாக, இந்திய அணி இறுதிப் போட்டிக்கு கம்பீரமாக முன்னேறியுள்ளது.
மறுபுறம், இந்தியாவிடம் இரண்டு முறை தோல்வியடைந்த போதிலும், மற்ற போட்டிகளில் வெற்றி பெற்று, தட்டுத் தடுமாறி பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில், "மூன்றாவது முறையாவது அதிர்ஷ்டம் கை கொடுக்கும்" என்ற நம்பிக்கையில் பாகிஸ்தான் களமிறங்கும்.
வாசிம் அக்ரமின் ஆலோசனைப்படி, பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் ஆரம்பத்திலேயே இந்திய டாப் ஆர்டருக்கு நெருக்கடி கொடுத்தால், போட்டியின் போக்கு மாற வாய்ப்புள்ளது. இல்லையெனில், இந்த ஆசிய கோப்பையிலும் இந்தியாவின் ஆதிக்கம் தொடர்வதற்கே அதிக வாய்ப்புள்ளது.