கொழும்பு : இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா அதிரடி ஆட்டம் ஆடி அரைசதம் அடித்து இருந்தார்.
அவரது பேட்டிங் மீது கடும் விமர்சனம் இருந்த நிலையில், கடினமான பாகிஸ்தான் பந்துவீச்சில் அவர் அரைசதம் அடித்து பதிலடி கொடுத்தார்.
ரோஹித் சர்மா ஆட்டத்தை எல்லோரும் பாராட்டிக் கொண்டு இருக்கும் போது முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் மட்டும் கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார். என்ன நடந்தது?

அதிரடி ஆட்டம் : சூப்பர் 4 சுற்றுப் போட்டிக்கு முன்பு குரூப் சுற்றுப் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ரோஹித் சர்மா 11 ரன்களே எடுத்து ஆட்டமிழந்து இருந்தார். ஆனால், இந்த முறை அதிரடி ஆட்டம் ஆடிய அவர் 4 சிக்ஸ், 6 ஃபோர் அடித்து மிரட்டினார். 49 பந்துகளில் 56 ரன்கள் குவித்தார்.
ரோஹித் விக்கெட் : மறுபுறம் சுப்மன் கில்லும் அரைசதம் அடித்து இருந்தார். அப்போது ஷதாப் கான் வீசிய 17வது ஓவரில் பந்தை தூக்கி அடிக்க ஆசைப்பட்ட ரோஹித், அதை சரியாக அடிக்காததால் பந்து கேட்ச் ஆனது. இந்திய அணியின் முதல் விக்கெட்டாக வீழ்ந்தார்.
குறைந்த ரன் ரேட் : ரோஹித் ஆட்டமிழந்த உடன் சுப்மன் கில்லும் அடுத்த ஓவரில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விராட் கோலி, கே எல் ராகுல் நிதான ஆட்டம் ஆடவே இந்திய அணியின் ரன் ரேட் சரிந்தது. போட்டி பாகிஸ்தான் கட்டுப்பாட்டுக்குள் சென்றது. அப்போது மழை வந்ததால் போட்டி 24.1 ஓவரில் நிறுத்தப்பட்டது. இந்தியா 147 ரன்களுக்கு 2 விக்கெட்கள் இழந்து இருந்தது.
கம்பீர் விளாசல் : இந்த நிலையில், ரோஹித் சர்மா தவறான ஷாட் ஆடியதால் தான் விக்கெட்டை இழந்தார். தவறான சமயத்தில் அவர் ஆட்டமிழந்ததால் அடுத்தும் விக்கெட் வீழ்ந்து போட்டி பாகிஸ்தான் வசம் சென்று விட்டது. பாகிஸ்தானுக்கு சிறிய வாய்ப்பை கூட ரோஹித் அளித்திருக்கக் கூடாது என கம்பீர் கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.
இதெல்லாம் தவறு இல்லையா? : ரோஹித் ஆட்டமிழந்தது தவறாகவே இருக்கட்டும். ஆனால், சுப்மன் கில் ஏன் அவருக்கு பின்னே ஆட்டமிழக்க வேண்டும்? விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் ஏன் நிதான ஆட்டம் ஆட வேண்டும். அதெல்லாம் தவறு இல்லையா? எல்லோருமே போட்டி சூழ்நிலைக்கு ஏற்ப ஆடுகிறார்கள். தவறும் செய்கிறார்கள். ஒரு வீரர் தவறு செய்தாலும், போட்டியில் அணிக்காக என்ன நன்மை செய்தார் என்று பார்ப்பதே சரியான பார்வையாக இருக்க முடியும். இதற்கு மாறாக கம்பீர் சொல்வது சரியா?