கராச்சி: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை "சார்" என்று அழைப்பேன் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சையத் அஜ்மல் தெரிவித்துள்ளார். 2011 உலகக்கோப்பை தொடரில் அவரின் விக்கெட்டை வீழ்த்திய எனக்கு கிடைத்த வாழ்நாள் பெருமை என்று கூறிய அஜ்மல், சர்வதேச கிரிக்கெட்டில் அவரை போன்ற சிறந்த மனிதரை பார்க்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணியில் தரமான சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லாமல் திண்டாடி வருகிறது. 2019 வரையில் நல்ல ஸ்பின்னர்கள் இருந்து வந்த நிலையில், பாகிஸ்தான் அணி எதிர்காலத்தை கணக்கில் கொண்டு ஸ்பின்னர்களை உருவாக்காததே அந்த அணியின் பின்னடைவுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் அணிக்காக 35 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 178 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் சயீத் அஜ்மல்.

அதேபோல் 113 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 184 விக்கெட்டுகளையும், 64 டி20 போட்டிகளில் விளையாடி 85 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார். இதன்பின் சயீத் அஜ்மல் பவுலிங் ஆக்ஷன் குறித்த சர்ச்சை எழுந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சயீத் அஜ்மல் ஓரங்கட்டப்பட்டார். இந்த நிலையில் சச்சின் டெண்டுல்கருடன் இணைந்து விளையாடிய தருணம் குறித்து அஜ்மல் கூறியுள்ளார்.
அதில், கிரிக்கெட் வரலாற்றில் சச்சின் டெண்டுல்கரை போன்ற ஜாம்பவானை பார்ப்பதே அரிதான விஷயம். உலகிலேயே மிகவும் நேர்மையான மற்றும் நல்ல குணம் கொண்டு மனிதரும் அவர் தான். எப்போதும் அவரை லெஜண்டாகவே பார்த்திருக்கிறேன். அதேபோல் சச்சின் டெண்டுல்கரை எப்போதும் சார் என்றே கூறுவேன். அதற்கான முழு தகுதியுடைய கிரிக்கெட் வீரர் அவர் மட்டும் தான்.
அதேபோல் கிரிக்கெட் களத்திற்குள் வந்துவிட்டால் சார் என்றெல்லாம் கிடையாது. அவருடன் நான் விளையாடியதே என் வாழ்நாள் பெருமையாக நினைக்கிறேன். அதேபோல் அவரின் விக்கெட்டை வீழ்த்தியது மறக்க முடியாத தருணம். எப்போதும் அந்த நினைவுகள் பசுமையாக இருக்கும். ஒரு மனிதராக அவர் மீது உச்சபட்ச மரியாதை வைத்திருக்கிறேன். 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதியில் சச்சின் டெண்டுல்கரை எல்பிடபிள்யூ செய்தேன்.
அப்போது பந்திற்கு முன்பாக கால்கள் இருந்தன. இருந்தாலும் நடுவர்கள் அவுட் கொடுக்கவில்லை. அதற்கான காரணம் குறித்து இப்போதும் தெரியவில்லை. அதேபோல் லீக் தொடரில் ஒன்றில் 2010ஆம் ஆண்டு சச்சினுடன் இணைந்து விளையாடக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. அப்போது எதிரணியில் பீட்டர்சன் பேட்டிங் செய்ய வந்தார். அப்போது என்னிடம் வந்த சச்சின் டெண்டுல்கர், தூஸ்ரா வகை பந்தை வீசி அவரின் விக்கெட்டை வீழ்த்துவிடு என்று அறிவுறுத்தினார். சரியாக நான் வீசிய தூஸ்ரா பந்தில் தான் பீட்டர்சன் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அந்த போட்டியில் 4 ஓவர்கள் வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் சச்சின் டெண்டுல்கர் மகிழ்ச்சியாக இருந்தார். அப்போதும் கூட என்னிடம், இன்னும் ஆட்டம் முடிவடைய 6 விக்கெட்டுகள் தேவை. அதனால் ஆட்டம் முடிந்தது என்று நினைக்க கூடாது என்று கூறினார். எப்போதும் எனக்கான மரியாதையை சச்சின் டெண்டுல்கர் அளித்திருகிறார். அவர் எப்போதும் களத்திலும், களத்திற்கு வெளியிலும் சிறந்த மனிதர் என்று தெரிவித்துள்ளார். சச்சின் குறித்த சயீத் அஜ்மலின் பேட்டி சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.