துபாய்: ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்துவதற்கான வழிகள் குறித்து பாகிஸ்தான் ஜாம்பவாம் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் தொடக்க வீரர்கள் விக்கெட்டை விரைவாக வீழ்த்த வேண்டும் என்று கூறிய அவர், ஒவ்வொரு பந்தையும் நம்பிக்கையுடன் வீச வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறார்.
41 ஆண்டு கால ஆசியக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணி விளையாட உள்ளன. வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்ற நிலையில், அந்த அணி ஆசியக் கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதனால் பாகிஸ்தான் அணி மீதான எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.

ஏனென்றால் பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் லீக் போட்டிகளில் எவ்வளவோ சொதப்பல்களை செய்தாலும், நாக் அவுட் போட்டிகளில் மிரள வைத்துவிடுவார்கள். இதுவரை இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் ஆடிய 11 பைனல்களில் 8ல் பாகிஸ்தான் அணியே வென்றிருக்கிறது. 3ல் மட்டுமே இந்திய அணி வென்றுள்ளது.
2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் கூட இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதன்பின் இரு அணிகளும் ஐசிசி பைனில் நேருக்கு நேர் எதிர்கொள்ளவில்லை. இந்த ஆசியக் கோப்பை தொடரில் 2 முறை இந்திய அணியிடம் தோல்வியை சந்தித்தாலும், பாகிஸ்தான் அணி வேகமாக முன்னேற்றம் அடைந்து வருவதாக பார்க்கப்படுகிறது.
குறிப்பாக ஃபீல்டிங்கில் பாகிஸ்தான் வீரர்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். மாறாக இந்திய அணியோ 12 கேட்ச்களை கோட்டைவிட்டுள்ளது. இந்த நிலையில் இந்திய அணியை வீழ்த்த என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் பேசி இருக்கிறார். கிட்டத்தட்ட பாகிஸ்தான் அணியால் அதனை செய்ய முடிந்தால், ஆசியக் கோப்பையை வெல்ல முடியும்.
வாசிம் அக்ரம் பேசுகையில், இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கோப்பை பைனல் என்பது மிகவும் எதிர்பார்த்த ஒன்றாகும். பாகிஸ்தான் அணி நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். தங்கள் மீது நம்பிக்கை வைத்து ஸ்மார்ட் கிரிக்கெட்டை விளையாட வேண்டும். இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை விரைவாக வீழ்த்தினால், நிச்சயமாக அழுத்தம் கொடுக்க முடியும்.
இந்திய அணியை பின்னுக்கு தள்ளிவிட்டால், பாகிஸ்தான் வெற்றி எளிமையாகும். என்ன நடந்தாலும், இறுதியில் சிறந்த அணியே வெல்லும் என்று தெரிவித்துள்ளார். ஆசியக் கோப்பைத் தொடரில் அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோரின் விக்கெட்டை விரைவாக வீழ்த்தினால், இந்திய அணிக்கு மிகப்பெரிய சிக்கல் தான். ஏனென்றால் இந்த ஆசியக் கோப்பையில் இவர்கள் இருவர் மட்டுமே ரன்களை சேர்த்து வருகின்றனர்.