மும்பை: சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் எப்படி ரன்களை ஷேஸ் செய்ய வேண்டும் என பாகிஸ்தானுக்கு இந்திய அணி பாடம் எடுத்திருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நியூசிலாந்துக்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 321 ரன்கள் என்ற இலக்கை ஷேஸ் செய்தது.
அப்போது பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பாபர் அசாம் மற்றும் சவுத் சக்கில் ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட் போல் விளையாடினர். முதல் 10 ஓவரில் பாகிஸ்தான் அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 22 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதேபோன்று முதல் 25 ஓவரில் பாகிஸ்தான் அணி 104 பந்துகளை டாட் பாலாக ஆக்கியது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருக்கிறது. பாகிஸ்தான் அணியின் இந்த ஆட்டம் மிகப்பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்திய அணி நேற்று துபாயில் வெறும் 229 ரன்கள் என்ற இலக்கை தான் எதிர்கொண்டது.
துபாய் ஆடுகளம் தோய்வாக இருக்கும் என்பதால் பவர் பிளேவை இந்திய அணி வீரர்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார்கள். குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா 41 ரன்கள் குவிக்க, பவர் பிளேவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 69 ரன்கள் சேர்த்தது. அதேபோன்று 120 பந்துகளில் இந்திய அணி 100 ரன்கள் சேர்த்தது. முதல் 20 ஓவரில் ஆடுகளம் ஓரளவுக்கு பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும்.
இந்த காலகட்டத்தில் ரன்களை சேர்த்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். இந்திய அணி வீரர்கள் பௌண்டரிகளை அடித்தும் சிங்கிள்ஸ்களை அதிக அளவு எடுத்தும் ரன்களை சேர்த்தனர். இதனை சுட்டிக்காட்டி உள்ள ரசிகர்கள் இந்திய அணியை பார்த்தாவது பாகிஸ்தான் வீரர்கள் எப்படி ஒரு நாள் கிரிக்கெட்டை சேஸ் செய்ய வேண்டும் என்பதை கற்றுக் கொள்ள வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.
இதே போன்று தொடக்க வீரரான கில், கடைசி வரை களத்தில் நின்று ஆட்டமிழக்காமல் சதம் அடித்தார். இதேபோல் பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம், கடைசி வரை நின்று இருக்க வேண்டும். ஆனால் அவர் ஆட்டத்தின் 34 வது ஓவரில் ஆட்டம் இழந்தார். ஒருவேளை அவர் கடைசி வரை நின்றிருந்தாவது பாகிஸ்தான் அணி வெற்றியின் அருகேயிலாவது சென்றிருக்கும்.