கொழும்பு : 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை சந்திக்க உள்ளது.
இந்த நிலையில் இந்தப் போட்டியைக் காண இரண்டு அணிகளின் ரசிகர்களும் ஆர்வமாக இருக்கிறார்கள். பலர் இலங்கையில் நேரில் போட்டியைக் காணவும் சென்று இருக்கிறார்கள்.

எதிர்பார்ப்பு என்ன? : இந்தப் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங்கை குறி வைத்து இருக்கிறது பாகிஸ்தான் அணி. வேகப் பந்துவீச்சில் இந்திய அணி தடுமாறி வருவதை உணர்ந்துள்ள அந்த அணி நான்கு வேகப் பந்துவீச்சாளர்களுடன் ஆட உள்ளது.
இதற்கு முன் நடந்த குரூப் சுற்றுப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் ஷஹேன்ஷஹீன் ஷா அப்ரிடி இந்திய அணியின் முன்னணி வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி விக்கெட்டை வீழ்த்தி கடும் நெருக்கடியை கொடுத்தார்.
ரசிகரின் கோரிக்கை : இந்த நிலையில், இந்திய ரசிகர் ஒருவர் சுமார் 7 மணி நேரம் பயணம் செய்து வந்து இந்த போட்டியை நேரில் காண வந்துள்ளார். அவர் தன் கையில் பதாகை ஒன்றை வைத்துள்ளார். அதில், தான் 7 மணி நேரம் வண்டி ஒட்டிக் கொண்டு இங்கே வந்திருப்பதாகவும், இந்தியா பேட்டிங் செய்வதை காண வேண்டும். அதனால் ஷஹீன் பாய் தயவுசெய்து கொஞ்சம் பார்த்து மெதுவாக செய்யுங்கள் என குறிப்பிட்டு இருக்கிறார்.
தெறிக்கும் இணையம் : அவர் பதாகை ஏந்தி நிற்கும் புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு முன்பே பரபரப்பை கிளப்பி இருக்கிறார் இந்த ரசிகர். மேலும் இந்திய அணியின் நிலையை அவர் குத்திக் காட்டியும் இருக்கிறார்.
மோசமான பேட்டிங் : இப்படி ஒரு ரசிகரை புலம்ப விட்ட பெருமை இந்திய அணியின் பேட்ஸ்மேன்களையே சேரும். இந்த முறையாவது வலுவான பாகிஸ்தான் பந்துவீச்சை சமாளித்து இந்திய அணி ரன் குவிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.