கொழும்பு : இலங்கையின் கொழும்பு நகரில் இந்தியா - பாகிஸ்தான் இடையே ஆன சூப்பர் 4 சுற்றுப் போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில் இந்திய அணி வரலாற்று சாதனையாக பாகிஸ்தான் அணியை 228 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இமாலய வெற்றியை பெற்றது.

ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அதிக ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா பெற்ற வெற்றிகளில் இந்த வெற்றி முதல் இடத்தை பெற்றுள்ளது.
இந்த பெரிய வெற்றிக்கு ரோஹித் சர்மா 56, சுப்மன் கில் 58, விராட் கோலி 122*, கே எல் ராகுல் 111*, குல்தீப் யாதவ் 5 விக்கெட்கள் என பல வீரர்களும் முக்கிய காரணம்.
மேலும், இந்தப் போட்டிக்கு முன்னதாக இந்திய அணி வலுவான பாகிஸ்தான் பந்துவீச்சை சந்திக்கவே முடியாது என்ற விமர்சனம் இருந்தது. அதை உடைக்க வேண்டும் என்ற முடிவில் திட்டம் போட்டு அந்த வலுவான பாகிஸ்தான் பந்துவீச்சையே ஒரு புரட்டு புரட்டி எடுத்து விட்டது இந்திய அணி.

ரோஹித் சர்மா 56, சுப்மன் கில் 58 அதிரடி ஆட்டம் ஆடி கூட்டணியாக 121 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு நல்ல துவக்கம் அளித்தனர். அடுத்து வந்த விராட் கோலி 94 பந்துகளில் 122 ரன்களும், கே எல் ராகுல் 106 பந்துகளில் 111 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க, இந்திய அணி 356 ரன்கள் குவித்தது.
அடுத்து பாகிஸ்தான் அணி பேட்டிங்கிலும் தடுமாறியது. அந்த அணியின் 5 விக்கெட்களை அள்ளினார் குல்தீப் யாதவ். இதை அடுத்து இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்தது.

இதை அடுத்து இந்திய அணி வீரர்கள் தாங்கள் தங்கி இருந்த ஹோட்டலுக்கு திரும்பிய போது அங்கே மேள தாளத்துடன் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின் கோலி கேக் வெட்டினார்.
இரவு நேரத்தில் இந்திய வீரர்கள் அனைவரும் நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்டனர். விராட் கோலியும், கேப்டன் ரோஹித் சர்மாவும் நடனம் ஆடிய வீடியோவும் வெளியாகி இருக்கிறது.