கொழும்பு : பாகிஸ்தான் அணிக்கு எதிராக முந்தைய ஒருநாள் போட்டியில் இந்திய அணி ரன் குவித்த ஒரே வழியையும் அடுத்த போட்டியில் அடைத்து விட்டது அந்த அணி.
இதற்கு முன்பு இந்திய அணி குரூப் சுற்றுப் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சுழற்பந்து வீச்சில்தான் ரன் குவித்து இருந்தது, தற்போது சுதாரித்துக் கொண்ட பாகிஸ்தான் அணி அந்த வழியை அடைத்துள்ளது.

முதல் சந்திப்பு : குரூப் ஏ பிரிவில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியின் போது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்கத்தில் பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சை கண்டு துவண்ட இந்திய அணியின் டாப் ஆர்டர் 66 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்தது.
ரன் குவித்த இந்தியா : எனினும், மத்திய ஓவர்களில் இஷான் கிஷன் மற்றும் ஹர்திக் பாண்டியா இணை சுழற் பந்துவீச்சில் சமாளித்து ரன் குவித்து அணியின் ஸ்கோரை 266 ரன்கள் வரை எடுத்துக் கொண்டு போனது.
கேப்டன் மீது விமர்சனம் : அப்போது பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் மீது ஒரு விமர்சனம் எழுந்தது. இந்திய அணி வேகப் பந்துவீச்சில் விக்கெட்களை இழக்கிறது என தெரிந்த பின் அவர் தொடர்ந்து அதை பயன்படுத்தி இருக்க வேண்டும். மாறாக அவர் சுழற் பந்துவீச்சை பயன்படுத்தினார் என்பதுதான் அது.
மாறிய அணி : இந்த முறை அந்த குறையை நிவர்த்தி செய்ய முடிவு செய்த பாபர் அசாம் அணியில் சுழற் பந்துவீச்சாளர் முகமது நவாசை நீக்கி இருக்கிறார். அவருக்கு பதில் நான்காவதாக பாஹீம் அஷ்ரப் என ஒரு வேகப் பந்து வீச்சாளரை களமிறக்கி இருக்கிறார்.
சிக்கலில் இந்திய அணி : வேகப் பந்துவீச்சில் இந்திய அணிக்கு சிக்கல், சுழற் பந்துவீச்சில் தான் இந்திய அணி ரன் குவிக்கிறது. இந்த இரண்டு விஷயங்களையும் சரியாக புரிந்து கொண்டு பாகிஸ்தான் அணி தன் அணியை மாற்றி இருக்கிறது. இது இந்திய அணிக்கு சிக்கலை ஏற்படுத்தும். அதையும் மீறி இந்திய அணி ரன் குவிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.