அகமதாபாத்: இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவருக்கும் பாகிஸ்தான் அணியின் ஷாகின் அப்ரிடி தொல்லை கொடுப்பார் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கணித்துள்ளார்.
உலகக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இன்று அகமதாபாத் மைதானத்தில் தொடங்கவுள்ளது. இந்த போட்டியை நேரில் காண்பதற்காக 1.32 லட்சம் ரசிகர்கள் மைதானத்திற்கு வரவுள்ளனர். இதனால் இந்த ஆட்டம் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. இதனால் இந்திய அணி நிச்சயம் வெற்றிபெற வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

ஆனால் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர்களை அவ்வளவு எளிதாக புறந்தள்ளிவிட முடியாது. குறிப்பாக இடதுகை வேகப்பந்துவீச்சாளரான ஷாகின் அப்ரிடி எந்த நேரத்திலும் விஸ்வரூபம் எடுக்கக் கூடியவர். 2021 டி20 உலகக்கோப்பை ரோகித் சர்மா, கோலி, கேஎல் ராகுல் மூவரையும் வீழ்த்தி காட்டி இருக்கிறார். அதேபோல் ஆசிய கோப்பையில் ரோகித் சர்மா, கோலியை அடுத்தடுத்து வீழ்த்தி இருக்கிறார்.
ஷாகின் அப்ரிடிக்கு எதிராக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் சராசரி வெறும் 18.50ஆக மட்டுமே உள்ளது. அதேபோல் சுப்மன் கில்லுக்கு எதிராக ஆடிய 2 போட்டிகளில் விளையாடி ஒரு முறை விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். ஷாகின் அப்ரிடி குறித்து ரவி சாஸ்திரி பேசுகையில், இந்திய அணி தொடக்க வீரர்களுக்கு எதிராக ஷாகின் அப்ரிடியின் ஸ்பெல் தான் சவாலாக இருக்க போகிறது.
இந்த சவாலில் யார் வெல்கிறார்களோ, அவர்களே ஆட்டத்தின் போக்கை முடிவு செய்யும் இடத்தில் இருப்பார்கள் என்று கணித்துள்ளார். அதேபோல், எங்கள் காலத்தில் பாகிஸ்தான் அணியுடன் தொடர்ந்து விளையாடி இருக்கிறோம். ஆனால் இப்போதைய சூழல் வேறு. அதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக தான் இருக்கும்.
ஆனால் சொந்த மண்ணில் இந்திய அணி களமிறங்குகிறது. அதேபோல் பாகிஸ்தான் அணியுடன் ஒப்பிடும் போது இந்திய வீரர்கள் திறமை வாய்ந்தவர்களாகவே இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் இதுவரை ஷாகின் அப்ரிடி விளையாடியுள்ள 2 உலகக்கோப்பை போட்டியில் 2 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.