கொழும்பு : 2023 ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியிடம் 226 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து இருக்கிறது பாகிஸ்தான் அணி.
சூப்பர் 4 சுற்றில் நடந்த இந்தப் போட்டியில், பாகிஸ்தான் அணியின் இந்த படுதோல்விக்கு காரணம் என்ன? இந்திய அணி அப்படி என்னதான் செய்தது?

இந்தப் போட்டிக்கு முன்னதாக இதே ஆசிய கோப்பை தொடரில் குரூப் சுற்றில் இந்திய அணி இதே பாகிஸ்தான் அணியிடம் 50 ஓவர்களில் 266 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. அதனால், இந்தப் போட்டியில் இந்திய அணி பேட்டிங்கில் ஓரளவாவது ரன் சேர்க்குமா? என்பதே அனைவரின் எண்ணமாக இருந்தது.
இந்திய அணி திட்டம் : இந்த நிலையில் இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு துவக்க வீரர்கள் ரோஹித் சர்மா, சுப்மன் கில் முதல் ஓவரில் இருந்தே அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்தனர். பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை அதிரடியாக ஆடினால் அவர்கள் அதை எதிர்பார்க்க மாட்டார்கள் என்பதை சரியாக கணித்தது ரோஹித் படை. அதே போலவே நடந்தது.
கேட்ச் வாய்ப்பு : ஆனால், பாகிஸ்தான் அணிக்கு இந்திய அணியின் திட்டத்தை தகர்க்க ஒரு சில வாய்ப்புகள் கேட்ச் வடிவில் கிடைத்தன. துவக்கத்தில் சுப்மன் கில் மட்டுமே அதிரடி ஆட்டம் ஆடி வந்தார். ரோஹித் நிதானமாகவே ஆடினார்.
கோட்டை விட்ட பாகிஸ்தான் : அப்போது 2வது ஓவரின் முதல் பந்திலும், 8வது ஓவரின் மூன்றாவது பந்திலும் சுப்மன் கில் கேட்ச் கொடுத்தார். ஆனால், அதை தவறவிட்டது பாகிஸ்தான் அணி. எட்டாவது ஓவரில் கேட்ச்சை நழுவ விட்ட போது சுப்மன் கில் 30 ரன்களில் இருந்தார். அப்போது ரோஹித் 24 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார்.
எல்லாமே மாறி இருக்கும் : அப்போது பாகிஸ்தான் கில் விக்கெட்டை வீழ்த்தி இருந்தால் நிச்சயம் இந்திய அணி அதிரடி ஆட்டம் ஆடும் திட்டத்தை கைவிட்டு இருக்கும். கடைசி ஓவர்களில் அதிரடி காட்டிக் கொள்ளலாம் என தன் திட்டத்தை மாற்றி இருக்கும். ஆனால், கிடைத்த வாய்ப்பை நழுவவிட்டது பாகிஸ்தான்.
அதிக தன்னம்பிக்கை : இந்திய அணியின் இந்த முதல் ஓவரில் இருந்தே அதிரடி ஆட்டம் ஆடும் திட்டம், போட்டிக்கு முன்பிருந்தே பாகிஸ்தான் அணியிடம் இருந்த அதிக தன்னம்பிக்கையை அசைத்துப் பார்த்தது. அவர்கள் தங்கள் அணி இந்திய அணியை விட பலமாக இருப்பதாக நினைத்துக் கொண்டு இருந்தது அவர்களுக்கு வினையாக மாறியது.
தயார் நிலையில் இல்லை : மேலும், இந்தியா அதிரடி ஆட்டம் ஆடுவதை எதிர்க்கொள்ள அவர்கள் தயாராகவே இல்லை. அதாவது, எப்படியும் இந்திய அணி துவக்கத்தில் விக்கெட்களை இழக்கும் என்றே அவர்கள் எண்ணியதாக இதை எடுத்துக் கொள்ளலாம்.
தோல்வி பயம் : அடுத்து இந்தியா 356 ரன்கள் என்ற இலக்கை எட்டிய போது பாகிஸ்தான் அணியிடம் தோல்வி பயம் ஒட்டிக் கொண்டது. அதன் பின் அவர்கள் பாபர் ஆசாம் பேட்டிங்கை மட்டுமே நம்பிக் கொண்டு இருந்தனர். அவரும் 10 ரன்னில் ஆட்டமிழக்க அவர்கள் தோல்வி பயத்தால் மொத்தமாக வீழ்ந்து 128 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனார்கள்.
மனதளவிலான தோல்வி மட்டுமே : இது பாகிஸ்தான் அணியின் மனதளவிலான தோல்வி மட்டுமே. நிச்சயம் அந்த அணியின் சமீப கால ஆட்டத்தை பார்த்தால் அந்த அணி திறமையான வீரர்களை கொண்டுள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம். ஆனால், இந்தியாவுக்கு எதிரான போட்டி என்றதும் அவர்கள் தங்கள் மீது ரசிகர்கள் வைத்திருக்கும் அளவு கடந்த எதிர்பார்ப்பால் தோல்வி பயத்தில் வீழ்ந்து விட்டனர் என்பதே உண்மை.