கொழும்பு : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி பேட்ஸ்மேன்கள் ரன்னே எடுக்க முடியாது.
சீக்கிரம் விக்கெட்டை பறிகொடுத்து இந்திய அணி தடுமாறும். ஷஹீன் ஷா அப்ரிடி வந்தாலே விக்கெட் தான் என பாகிஸ்தான் ரசிகர்கள் ஓவர் பில்டப் கொடுத்து வந்தனர்.

அதற்கேற்ப இந்த ஆசிய கோப்பை தொடரில் அவருடன், ஹாரிஸ் ரௌப், நசீம் ஷா இணைந்து எதிரணிகளை தங்கள் வேகப் பந்துவீச்சால் மிரட்டி வந்தனர். ஆனால், சூப்பர் 4 போட்டியில் அதற்கெல்லாம் சேர்த்து வைத்து இந்திய அணி பேட்டிங்கில் தரமான சம்பவம் செய்துள்ளது.
சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி கொழும்பு பிரேமதேசா மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
ரோஹித் சர்மா, சுப்மன் கில் துவக்க வீரர்களாக களமிறங்கினர். துவக்கம் முதலே சுப்மன் கில் அதிரடி ஆட்டம் ஆடி யாருமே தொட முடியாத வீரர் என கூறப்பட்ட ஷஹீன் ஷா அப்ரிடி வீசிய இரண்டு ஓவர்களில் மட்டும் ஆறு ஃபோர் அடித்து அஸ்திவாரம் அமைத்தார்.
அடுத்து ரோஹித் சர்மாவும் இணைய அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் என அனைத்து பந்து வீச்சாளர்களையும் துவைத்து எடுத்தனர். அப்படி நடக்கும் என இந்திய ரசிகர்களே எதிர்பார்க்கவில்லை என்பது தான் ஆச்சரியம். ரோஹித், கில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்து. விராட் கோலி, ராகுல் கொஞ்ச நேரம் "அடித்துப் பழக" வழி விட்டனர்.
முதலில் கோலி, ராகுல் நிதான ஆட்டம் ஆடினர். அப்போது மழை வந்ததால் போட்டி அடுத்த நாளுக்கு (ரிசர்வ் நாள்) சென்றது. விராட் கோலி மற்றும் ராகுலும் அதிரடி ஆட்டம் ஆடினர். இவர்கள் குறிப்பாக ஷஹீன் ஷா அப்ரிடியை குறி வைத்து தாக்கினர். கூடவே பாஹீம் அஷ்ரப், இப்திகார் அஹ்மத் என மற்ற பந்து வீச்சாளர்களும் சிக்கினர்.
கோலி 122, ராகுல் 111 ரன்கள் குவித்து பாகிஸ்தானை துவம்சம் செய்தனர். பெரிய பில்டப் கொடுக்கப்பட்ட ஷஹீன் ஷா அப்ரிடி 10 ஓவர்களில் 79 ரன்கள் கொடுத்து மோசமான பந்துவீச்சை பதிவு செய்தார். பாஹீம் அஷ்ரப் 10 ஓவர்களில் 74, ஷதாப் கான் 10 ஓவர்களில் 71, அஹ்மத் 5.4 ஓவர்களில் 52 ரன்கள் கொடுத்து இருந்தனர்.