கொழும்பு : பாகிஸ்தான் அணிக்கு எதிரான முக்கியமான ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டியில் இந்திய அணியில் இருந்து மூத்த வீரர் முகமது ஷமி நீக்கப்பட்டுள்ளார்.
இந்தப் போட்டிக்கு முன் பல முன்னாள் வீரர்களும் முகமது ஷமியை போட்டியில் களமிறக்க வேண்டும் என கூறினர். ஆனால், அதற்கு நேர்மாறாக இளம் வீரரும், ஆல்-ரவுண்டர் என சொல்லப்படும் ஷர்துல் தாக்குர்-ஐ அணியில் களமிறக்கி இருக்கிறார் ரோஹித் சர்மா.

2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் சூப்பர் 4 சுற்றில் மோத உள்ளன. இதற்கு முந்தைய குரூப் சுற்றில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக பேட்டிங் மட்டுமே செய்தது. பந்து வீசும் வாய்ப்பு மழையின் காரணமாக கிடைக்கவில்லை.
அந்தப் போட்டியில் இந்திய அணி 266 ரன்கள் மட்டுமே எடுத்தது. பேட்டிங் பலவீனமாக இருப்பதை அப்போதே இந்திய அணி உணர்ந்து கொண்டது. அதே சமயம், பாகிஸ்தான் அணி வேகப் பந்துவீச்சை வைத்து எதிரணிகளை துவம்சம் செய்து வருகிறது.
அதே போல, இந்திய அணியும் பும்ரா, முகமது ஷமி என இரண்டு அதிரடி வேகப் பந்துவீச்சாளர்களை ஒன்றாக போட்டிகளில் ஆட வைக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. ஆனால், பேட்டிங் பலவீனத்தை காரணம் காட்டி கேப்டன் ரோஹித் சர்மா, ஷர்துல் தாக்குர்-ஐ அணியில் தேர்வு செய்து வருகிறார்.
தாக்குர் போட்டிகளில் விக்கெட் வீழ்த்தினாலும் அதிக ரன்களை வாரி இறைப்பது பெரிய பிரச்சனையாக உள்ளது. அதே போல, அவர் பேட்டிங் ஆடுவார் என சொல்லிக் கொண்டாலும், இதுவரை பெரிய தாக்கத்தை அவரது பேட்டிங் ஏற்படுத்தவில்லை. ஆனால், ஷமி எதிரணிகளை மிரட்டும் வல்லமை கொண்டவர்.
இந்த வித்தியாசத்தை கண்டுகொள்ளாமல் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் காயத்தில் இருந்து மீண்டு வந்த பும்ராவை அணியில், சேர்த்து அவர் இல்லாத போது அணியில் ஆடிய ஷமியை நீக்கி இருக்கிறார் ரோஹித். ஷர்துல் தாக்குர் தன் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். பெட்ரோமாக்ஸ் லைட் தான் வேண்டும் என கேப்டன் அடம் பிடிக்கிறார். அவரது முடிவால் போட்டியில் நன்மை பயக்குமா?