கொழும்பு : தன் பேட்டிங் குறித்த விமர்சனத்துக்கு எல்லாம் சேர்த்து வைத்து தன் அதிரடி ஆட்டம் மூலம் பதிலடி கொடுத்திருக்கிறார் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஒரே பந்துவீச்சாளரை குறி வைத்து தொடர்ந்து ஐந்து பந்துகளில் சிக்ஸ், ஃபோர் என விளாசி 26 ரன்களை சேர்த்து இருக்கிறார்.

இந்தியா பேட்டிங் : ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. பாகிஸ்தான் அணியின் வலுவான வேகப் பந்துவீச்சை சர்வ சாதாரணமாக அடித்து ஆடியது ரோஹித் சர்மா - சுப்மன் கில் துவக்க ஜோடி.
கில் அதிரடி ஆட்டம் : சுப்மன் கில் எப்போதும் நிதானமாக ஆடத் துவங்கி பின் அதிரடி காட்டுவார். ஆனால், இந்தப் போட்டியில் பவுண்டரியில் தான் ரன்னே எடுப்பேன் என சபதம் எடுத்தது போல தொடர்ந்து பவுண்டரி மழை பொழிந்தார். 10 ஃபோர் அடித்த அவர் 52 பந்துகளில் 58 ரன்கள் குவித்தார்.
தாண்டவம் ஆடிய ரோஹித் : மறுபுறம் முதல் 10 ரன்களை ஒரு சிக்ஸ், ஒரு ஃபோர் அடித்து எடுத்த ரோஹித் சர்மா, அதன் பின் நீண்ட நேரம் பந்துகளை வீணடித்து வந்தார். ஆனால், சுழற் பாகிஸ்தான் பந்துவீச்சை பயன்படுத்தத் துவங்கிய உடன் தன் உச்சகட்ட அதிரடி ஆட்டத்தை காட்டினார்.
சிக்கிய ஷதாப் கான் : பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஷதாப் கான் வீசிய 13வது ஓவரின் கடைசி மூன்று பந்துகளில் இரண்டு சிக்ஸ், ஒரு ஃபோர் அடித்து இருந்தார் ரோஹித். அந்த ஓவரில் 19 ரன்கள் கிடைத்தது.
26 ரன்கள் : அடுத்து 15வது ஓவரும் ஷதாப் கான் வீசினார். அப்போது அந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் ரோஹித் ஒரு சிக்ஸ் மற்றும் ஒரு ஃபோர் அடித்தார். ஷதாப் கான் பந்துவீச்சில் தொடர்ந்து ஐந்து பந்துகளில் மூன்று சிக்ஸ், இரண்டு ஃபோர் அடித்து 26 ரன்கள் குவித்து ருத்ர தாண்டவம் ஆடி இருந்தார் ரோஹித்.
இந்தியா ரன் குவிப்பு : முதல் விக்கெட்டுக்கு இந்திய அணி 121 ரன்கள் சேர்த்து பாகிஸ்தானை நிலைகுலைய வைத்தது. கில் 58 ரன்களும், ரோஹித் 49 பந்துகளில் 56 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். ரோஹித் சர்மா நான்கு சிக்ஸ் மற்றும் ஆறு ஃபோர் அடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.