கொழும்பு : பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் யாரும் எதிர்பாராத வகையில் பேட்டிங் திட்டத்தை மாற்றி அதிரடி ஆட்டம் ஆடியது ரோஹித் சர்மா - சுப்மன் கில் துவக்க ஜோடி.
இந்தப் போட்டிக்கு முன் பெரிதும் புகழப்பட்ட பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் அவர்கள் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் திணறினர்.

2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான குரூப் சுற்றுப் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் தடுமாறியது. குறிப்பாக துவக்க வீரர்கள் ரோஹித் சர்மா 11 ரன்களும், சுப்மன் கில் 10 ரன்களும் எடுத்து இருந்தனர்.
ஆனால், சூப்பர் 4 சுற்றுப் போட்டியில் அதற்கு நேர் மாறாக அவர்கள் இருவரும் அதிரடி ஆட்டம் ஆடினர். இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ஷஹீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரௌப் இந்திய அணியின் விக்கெட்களை மளமளவென வீழ்த்துவார்கள் என்ற எதிர்பார்ப்பே அனைவருக்கும் இருந்தது.
ஆனால், துவக்கம் முதல் ஓவரிலேயே சிக்ஸ் அடித்த ரோஹித் சர்மா இந்திய அணி வேறு திட்டத்துடன் இருப்பதை சொல்லாமல் சொன்னார். அதன் பின் ரோஹித் சர்மா ஒரு பவுண்டரி அடித்து தொடர்ந்து பந்துகளை வீணடித்து ரன் சேர்க்காமல் இருந்தார். குறிப்பாக சிங்கிள் ரன்களை அவர் ஓட முயற்சிக்கவே இல்லை.
மறுபுறம் சுப்மன் கில் நிதான ஆட்டம் ஆடும் தன் வழக்கத்துக்கு மாறாக, இந்தப் போட்டியில் அடித்தால் பவுண்டரி மட்டும் தான் என முடிவு செய்து ஃபோர் மழையாக பொழிந்தார். 10 ஃபோர் அடித்து அரைசதம் கடந்த பின்னரே சற்று நிதானம் ஆனார்.
மறுபுறம் ரோஹித் சர்மா வெறியாட்டம் ஆடி நான்கு சிக்ஸ், ஆறு ஃபோர் உடன் அரைசதம் கடந்தார். இந்திய அணியின் இந்த அதிரடி ஆட்டத்தை பாகிஸ்தான் அணி எதிர்பார்க்கவில்லை. விக்கெட் மழை பொழியும் என எண்ணிய இடத்தில் பவுண்டரி மழை பொழிந்தது.
இந்திய அணியின் துவக்க ஜோடி சரியான திட்டம் போட்டு பாகிஸ்தான் அணியை நிலைகுலைய வைத்துள்ளது. எப்போதும் நிதான ஆட்டம் ஆடும் கில் துவக்கம் முதலே அதிரடி ஆட்டம் ஆடினார். ரோஹித் சர்மா பந்துவீச்சின் தன்மையை பற்றி தெரிந்து கொள்ள சில ஓவர்களை எடுத்துக் கொண்டு விளாசினார். இதை எதிர்பார்க்காத பாகிஸ்தான் அணி திணறித் தவித்தது.