மும்பை: கடந்த 2004 ஆம் ஆண்டு இந்திய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடியது. அப்போது சேவாக் முல்தான் மைதானத்தில் முச்சதம் அடித்திருந்தார். அவர் 295 ரன்கள் அடித்திருந்தபோது முச்சதத்தை எட்டுவதற்காக அதிரடியாக ஒரு சிக்ஸ் அடித்து அதை எட்டி இருந்தார். அது அப்போது உலகெங்கிலும் மிகப்பெரும் வியப்பையும், பாராட்டுகளையும் பெற்றது.
ஆனால், அதற்கு முன் சேவாக்கை சிக்ஸ் அடிக்கக் கூடாது என சச்சின் டெண்டுல்கர் மிரட்டி இருந்த சம்பவம் தற்போது வெளியாகி உள்ளது. இது குறித்து சேவாக் ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார். அப்போது முல்தான் டெஸ்ட் போட்டியில் சச்சின் டெண்டுல்கருடன் சேவாக் 336 ரன்கள் கூட்டணி அமைத்து ரன் சேர்த்து இருந்தார். அதற்கு முன் சேவாக் மற்றும் ராகுல் டிராவிட் ரன் சேர்த்து வந்தனர். ராகுல் டிராவிட் ஆட்டம் இழந்து சென்ற போது சேவாக் 120 ரன்கள் எடுத்திருந்தார்.

அப்போது சச்சின் டெண்டுல்கர் நான்காம் வரிசையில் களமிறங்கினார். அப்போது சக்லைன் முஷ்டாக் பந்து வீசினார். ஷேவாக் ஏறி வந்து அந்த பந்தை சிக்ஸ் அடித்தார். லாங் ஆனில் நின்று இருந்த ஃபீல்டரின் தலைக்கு மேலே பந்து சென்று சிக்சர் ஆக மாறியது. லாங் ஆன் ஃபீல்டர் சிறிது முயற்சி செய்திருந்தாலும் அது கேட்ச் ஆக மாறி இருக்கும். அவர் அதை தவறவிட்டதால் சேவாக் அப்போது தப்பினார்.
அதை பார்த்த சச்சின் டெண்டுல்கர், "நீ மறுபடியும் சிக்ஸ் அடித்தால் உன்னை பேட்டாலேயே அடிப்பேன்." என்று கூறி இருக்கிறார். ஏனெனில், சேவாக் அப்போது 100 ரன்களுக்கும் மேல் சேர்த்து அதிரடியாக ரன் சேர்த்து வந்தார். அப்போது அபாயகரமான சிக்ஸர்களை அடித்து அவர் அவுட் ஆகிவிட்டால் அது இந்திய அணிக்கு பின்னடைவாக அமையும் என்பதால் சச்சின் அவ்வாறு விளையாட்டாக சொல்லி இருந்தார்.
ஆனால், சேவாக் 295 ரன்களை எட்டியவுடன் சச்சினிடம் சென்று ஒரு சவாலை விட்டிருந்தார். இப்போது சக்லைன் முஷ்டாக் பந்து வீசினால் நான் ஏறிச் சென்று மீண்டும் ஒரு சிக்ஸ் அடிப்பேன் என்று கூறி இருக்கிறார். அதை கேட்ட சச்சின், "நீ முட்டாளா? நீ 300 ரன்களை அடிக்கும் முதல் இந்திய வீரராக மாறும் வாய்ப்பு இது." என்றார்.
ஆனால், அப்போது சேவாக், "295 ரன்கள் எடுத்த முதல் இந்திய வீரராக நான் இருப்பேன்." என்று கூறிவிட்டு சொன்னதைப் போலவே சக்லைன் முஷ்டாக் பந்து வீச்சில் ஒரு சிக்ஸ் அடித்து 300 ரன்களை எட்டினார். அந்த போட்டியில் சேவாக் 309 ரன்கள் அடித்திருந்தார். இந்திய அணி 675 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்த நிலையில் டிக்ளர் செய்தது. பின்னர் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.