கொழும்பு: டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இந்தியா, பாகிஸ்தான் மோதும் ஏ பிரிவு லீக் ஆட்டம் கொழும்புவில் நடைபெற்று வருகிறது இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதை அடுத்து இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய அபிஷேக் ஷர்மா, டக் அவுட் ஆகி வெளியேறினார். இந்த சூழலில் மற்றொரு தொடக்க வீரரான இசான் கிஷன் 40 பந்துகளில் 77 ரன்கள் சேர்த்து அசத்தினார். இதில் 10 பவுண்டரி, மூன்று சிக்சர்கள் அடங்கும்.

நடு வரிசையில் சூரிய குமார் யாதவ் 32 ரன்களும் சிவம் துபே 27 ரன்களும், திலக் வருமா 25 ரன்களும் எடுக்க இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் இறங்கியது. இந்த இலக்கை எட்ட வேண்டும் என்றால் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் அதிரடியை காட்ட வேண்டும்.
குறிப்பாக பாகிஸ்தான் அணியின் ஃபர்கான் கடந்த ஆசிய கோப்பையில் இந்திய அணிக்கு எதிராக அதிரடியாக விளையாடி அரை சதங்களை அடித்தார். இதனால் பாகிஸ்தான் வெற்றிக்கு அவர் முக்கிய பங்கு வகிப்பார் என்று அந்நாட்டு ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இந்த சூழலில் ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சில் அவர் டக்அவுட் ஆகி வெளியேறி பாகிஸ்தான் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.
டி20 கிரிக்கெட்டில் அதிரடி வீரராக அறியப்படும் அவர் இந்த போட்டியில் டக் அவுட் ஆனது பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதேபோன்று மற்றொரு தொடக்க வீரரான சையும் அயூப், பும்ராவுக்கு எதிராக சிக்சர் அடித்தார்.
எனினும் அடுத்த பந்திலே பும்ரா அவரை எல்பி டபிள்யு ஆக்கி பெவிலியனுக்கு அனுப்பினார்.இதன் காரணமாக பாகிஸ்தான அணி ஆறு ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் பாகிஸ்தான் அணி பேட்டிங் இந்தியாவுக்கு நிகரானது இல்லை என்பது மீண்டும் ஒருமுறை தெளிவாகிவிட்டது.