கொழும்பு: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தோல்விக்குப் பாகிஸ்தான் அணியின் தவறான கணிப்பும், இந்தியாவின் பந்துவீச்சுமே முக்கியக் காரணமாக அமைந்தது.
கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணியின் பேட்டிங்கை முடக்குவதற்காகப் பாகிஸ்தான் ஒரு பிரம்மாண்ட சுழல் வியூகத்தை வகுத்திருந்தது. ஆனால் அதுவே அவர்களுக்கு வினையாக முடிந்தது.

கொழும்பு ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமாக இருக்கும் என்று கணித்த பாகிஸ்தான், இந்திய பேட்ஸ்மேன்களைச் சிக்க வைக்க 6 சுழற்பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தியது. அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஷாகின் அப்ரிடிக்கு வெறும் 2 ஓவர்கள் மட்டுமே வழங்கப்பட்டது. மீதமுள்ள 18 ஓவர்களையும் சுழற்பந்து வீச்சாளர்களே வீசினர்.
இந்தத் திட்டம் ஓரளவுக்குக் கைகொடுத்தது. அபிஷேக் சர்மா (0), ஹர்திக் பாண்டியா (0) போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களை விரைவாக வீழ்த்தினர் பாகிஸ்தான் ஸ்பின்னர்கள். இருப்பினும், இஷான் கிஷனின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் குவித்தது. இஷான் கிஷன் 40 பந்துகளில் 77 ரன்கள் சேர்த்து இருந்தார்.
இந்திய அணியின் பேட்டிங்கை மட்டுப்படுத்த நினைத்த பாகிஸ்தான், இந்தியாவின் பந்துவீச்சுப் படையின் வலிமையைச் சற்றுக் குறைவாக மதிப்பிட்டுவிட்டது. டி20 போட்டிகளில் அனுபவம் வாய்ந்த ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் அடங்கிய கூட்டணி பாகிஸ்தானைச் சிதறடித்தது.
176 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு, இந்திய பந்துவீச்சாளர்கள் ஆரம்பத்திலேயே அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர். பவர் பிளே ஓவர்கள் முடிவதற்குள்ளாகவே பாகிஸ்தான் அணி 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்துத் தடுமாறியது.
தொடக்க வீரர் சாஹிப்சதா ஃபர்ஹான் ரன் ஏதும் எடுக்காமல் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கேப்டன் சல்மான் அலி ஆகா 4 ரன்கள் எடுத்தும், சயிம் அயூப் 6 ரன்கள் எடுத்தும் ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச்சில் வெளியேறினர். அணியின் நம்பிக்கை நட்சத்திரமான பாபர் அசாம் 5 ரன்களில் அக்சர் படேல் பந்துவீச்சில் வீழ்ந்தார். முதல் 5 ஓவர்களுக்குள் பாகிஸ்தான் அணியின் டாப் ஆர்டர் சீட்டுக்கட்டு போலச் சரிந்தது.
வேகப்பந்து வீச்சாளர்கள் ஏற்படுத்திய தாக்கத்தைத் தொடர்ந்து, சுழற்பந்து வீச்சாளர்கள் பாகிஸ்தான் அணியை முழுமையாக முடக்கினர். உஸ்மான் கான் மட்டும் தனி ஆளாகப் போராடி 44 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் யாரும் இரட்டை இலக்க ரன்களைத் தொடக்கூடச் சிரமப்பட்டனர்.
வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் மிகத் துல்லியமாகப் பந்துவீசினர். வருண் சக்கரவர்த்தி 3 ஓவர்களில் 17 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் 4 ஓவர்களில் 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஹர்திக் பாண்டியா மற்றும் பும்ரா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இறுதியில் 18 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 114 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டளையும் இழந்து படுதோல்வி அடைந்தது. இந்தியாவின் பந்துவீச்சு வலிமையைப் புரிந்துகொள்ளாமல், வெறும் பேட்டிங்கை மட்டும் குறிவைத்துத் திட்டம் தீட்டியதே பாகிஸ்தானின் தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.