நியூயார்க் : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 120 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது. குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியாவும் பாகிஸ்தானும் 19-வது லீக் ஆட்டத்தில் நியூயார்க் நகரில் இன்று பல பரீட்சை நடத்தியது.
பாகிஸ்தான் அணி ஏற்கனவே அமெரிக்காவுடன் வீழ்ந்த நிலையில் இந்தியாவுக்கு எதிராக எப்படி செயல்பட போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.
இந்த நிலையில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் விராட் கோலி நான்கு ரன்களில் ஆட்டம் இழந்தார்.இதன் பிறகு எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த நிலையில் 12 பந்துகளில் 13 ரன்கள் வெளியேறினார்.
இதனை அடுத்து விக்கெட்டுகள் சரிவதை தடுக்க ரிஷப் பண்ட் உடன் அக்சர் பட்டேல் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்க போராடினார். அக்சர் பட்டேல் இரண்டு பவுண்டரி ஒரு சிக்சர் என 18 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். அதிரடி வீரர் சூரியகுமார் யாதவும் 7 ரன்களில் வெளியேற சிஎஸ்கே வீரர் சிவம் துபே மூன்று ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார்.
தனியாளாக நின்று போராடிய ரிஷப் பண்ட் 31 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். இதில் ஆறு பவுண்டரிகள் அடங்கும். அதன் பிறகு களம் இறங்கிய இந்திய அணி வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். ஹர்திக் பாண்டியா 7 ரன்களிலும், ரவீந்திர ஜடேஜா , பும்ரா ஆகியோர் டக்அவுட் ஆகியும் வெளியேற இந்திய அணி 19 ஓவர் முடிவில் 119 ரன்கள் எடுத்தது.
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் நஷிம் சா மூன்று விக்கெட்டுகளையும், முகமது அமீர் இரண்டு விக்கெட்டுகளையும் ஹாரிஸ் ரவுப் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.ஒரு கட்டத்தில் இந்தியாவில் 3 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் எடுத்த நிலையில் மேலும் 30 ரன்கள் சேர்ப்பதற்குள் அடுத்தடுத்து ஏழு விக்கெட்டுகளை இழந்து 119 ரன்களில் சுருண்டது குறிப்பிடத்தக்கது.