நியூயார்க் : டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற உள்ள 19வது லீக் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் நியூயார்க் புறநகர் பகுதியில் பலப்பரீட்சை நடத்துகிறது. மழை காரணமாக போட்டி தாமதமாக தொடங்கியது.
இந்த நிலையில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக மைதானம் என்பதால், முதலில் பந்து வீசும் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கணிக்கப்பட்டது. இந்த நிலையில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம், முதலில் பந்து வீசுவதாக அறிவித்துள்ளார்.

இது பாகிஸ்தான் அணிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, தாங்களும் முதலில் பந்துவீச்சை தான் தேர்வு செய்திருப்போம். தற்போது ஆடுகளம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை கண்காணித்து அதற்கு ஏற்ற வகையில் நல்ல ஸ்கோரை அமைக்க வேண்டிய பொறுப்பில் இருக்கின்றோம்.
ஏற்கனவே இங்கு இரண்டு போட்டிகள் விளையாடி இருப்பதால் மைதானம் எப்படி செயல்படும் என்று ஒரு அளவுக்கு எங்களுக்கு தெரியும். ஒரு பேட்டிங் அணியாக நாங்கள் என்ன செய்ய வேண்டும். நல்ல இலக்கு எது என்பது குறித்து பேசி இருக்கின்றோம். பந்து வீச்சாளர்கள் தற்காத்துக் கொள்ளும் அளவுக்கு ஒரு இலக்கை நிர்ணயிக்க வேண்டும்.
உலக கோப்பையில் அனைத்து போட்டிகளுமே மிகவும் முக்கியமானது. அனைத்து போட்டிகளும் எது வேண்டுமானாலும் நடக்கலாம். எங்கள் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று ரோகித் சர்மா கூறினார். இதற்கு முன்பு பேசிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் ஆடுகளத்தில் ஈரப்பதம் இருப்பதால் நாங்கள் முதலில் பந்து வீச முடிவு செய்து இருக்கின்றோம்.
எங்களிடம் நான்கு வேக பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். இதனால் களம் எங்களுக்கு சாதகமாக தான் அமையும். இதனை சிறந்த முறையில் பயன்படுத்த நாங்கள் விரும்புகிறோம். இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றாலே நிச்சயம் பெரிய ஆட்டம் தான். நாங்கள் இன்றைய ஆட்டத்திற்கு தயாராக இருக்கின்றோம். எங்களுடைய நூறு சதவீத திறமையை வெளிப்படுத்துவோம். எங்களுடைய உத்வேகமும் அதிகமாக தான் இருக்கிறது என்று ஆட்டத்தில் அசாம் கான் விளையாடவில்லை என்று பாபர் அசாம் கூறினார்.