நியூயார்க் : 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சூரியகுமார் யாதவும் தடுமாறியது ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்திருக்கிறது. நியூயார்க்கில் நடைபெற்று வரும் இந்த தொடரில் 19 ஆவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் இந்தியா பல பரீட்சை நடத்தியது.
வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் போட்டி நடைபெறுவதால் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா 13 ரன்களிலும், விராட் கோலி நான்கு ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

ரிஷப் பண்ட் உடன் அக்சர் பட்டேல் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டார். அக்சர் பட்டேல் 20 ரன்களில் ஆட்டம் இழக்க சூரியகுமார் யாதவ் களத்திற்கு வந்தார். இந்த போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்ரான் அக்மல் ஒரு சவால் விட்டிருந்தார்.
அதில் சூரிய குமார் யாதவ் நம்பர் ஒன் வீரர் என்றால் பாகிஸ்தானுக்கு எதிராக ரன் அடிக்க வேண்டும் என்று அவர் சவால் விட்டார். இந்த சவாலுக்கு சூரியகுமார் யாதவ் தன்னுடைய பேட் மூலம் பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் பாகிஸ்தான் வீரர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சூரியகுமார் யாதவ் தடுமாறினார்.
எதிர்கொண்ட எட்டு பந்துகளில் அவர் ஒரே ஒரு பவுண்டரி மட்டும்தான் அடித்தார். மொத்தமாகவே சூரியகுமார் அடித்த ரன்கள் 7 தான். இதன் மூலம் கம்ரான் அக்மல் சவாலில் சூரியகுமார் தோற்று இருக்கிறார். டி20 கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் சூரியக்குமார் முதலிடத்தில் இருக்கிறார். ஆனால் பாகிஸ்தானுக்கு எதிராக அவர் தொடர்ந்து தடுமாறி வருகிறார்.
இதுவரை பாகிஸ்தானுக்கு எதிராக 5 போட்டிகளில் விளையாடியுள்ள சூரியகுமார் யாதவ், மொத்தமாகவே 62 ரன்கள் தான் அடித்திருக்கிறார். இதில் அவர் அடித்திருக்கும் அதிகபட்ச ஸ்கோர் 18 ரன்கள் ஆகும். சராசரி வெறும் 15 என்ற அளவில் தான் இருக்கின்றது. இந்த ஐந்து இன்னிங்ஸில் சூரிய குமார் யாதவ் வெறும் ஏழு பவுண்டரி ,ஒரு சிக்சர் தான் அடித்திருக்கிறார்.