லாகூர் : பாகிஸ்தானில் விராட் கோலிக்கு அதிக ரசிகர்கள் இருப்பதாக அந்த நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இந்தியா பாகிஸ்தான் அணிக்கு இடையிலான டி20 உலக கோப்பை லீக் ஆட்டம் இன்று நியூயார்க் நகரில் நடைபெறுகிறது.
இந்த போட்டியை எதிர்பார்த்து இருதரப்பு ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் பாகிஸ்தானில் விராட் கோலிக்கு எத்தனை ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது குறித்து முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் ரசித் லத்தீப், அசார் அலி ஆகியோர் அளித்த பேட்டி தான் தற்போது கவனத்தை ஈர்த்து இருக்கிறது.

இது குறித்து பேசிய முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி, விராட் கோலி எப்போது லாகூர், கராச்சி, ராவல்பிண்டி போன்ற நகரங்களில் விளையாடுகிறாரோ அப்போதுதான் அவருக்கு எவ்வளவு ரசிகர்கள் பாகிஸ்தானில் இருக்கிறார்கள் என்பதை உலகம் பார்க்கும். அந்த அளவுக்கு ஒரு மாஸ் வீரர் விராட் கோலி.
நீங்கள் சொன்னால் நம்ப மாட்டீர்கள். விராட் கோலி விளையாடும்போது மைதானம் முழுவதும் பச்சை நிற ஜெர்சியில் ரசிகர்கள் அமர்ந்திருப்பார்கள். ஆனால் அந்த ஜெர்சியின் பின்னால் பாபர் அசாம் என்ற பெயரோ இல்லை, ஷாகின் அப்ரிடி என்ற பெயரோ இருக்காது. விராட் கோலியின் பெயர் போட்டு நம்பர் 18 ஜெர்சி பச்சை நிறத்தில் ரசிகர்கள் அணிந்திருப்பார்கள்.
விராட் கோலி சில நாட்களுக்கு முன்பு ஃபார்ம் இல்லாமல் தவித்தார். அப்போது நான் அவருக்காக அல்லாவிடம் பிரார்த்தனை செய்தேன். விராட் கோலி சிறப்பாக விளையாட வேண்டும் என்று நான் மூன்று ஆண்டுகளாக அல்லாவிடம் துவா செய்தேன். நான் ஏன் இதை செய்தேன் என்று எனக்குத் தெரியாது.
விராட் கோலி சரியாக விளையாடவில்லை என்று பலரும் அவரை விமர்சிக்கலாம்.ஆனால் 15 ஆண்டுகளாக இந்த பணியை அவர் செய்து கொண்டிருக்கிறார் என்பதை மறந்து விட வேண்டாம். சரிவிலிருந்து விராட் கோலி தற்போது மீண்டு வந்திருக்கிறார். அப்படி இதுவரை மீண்டு வந்ததை நான் பார்த்ததில்லை என்று அசார் அலி கூறியிருக்கிறார். இதை தொடர்ந்து பேசிய ரசித் லத்தீப், விராட் கோலிக்கு மட்டும் கிடையாது பல இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பாகிஸ்தானில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
கிரிக்கெட் வீரர்கள் கவாஸ்கர், தோனி, சச்சின், கபில்தேவ் போன்ற பல வீரர்களுக்கு இங்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். இதே போல் அமிதாப்பச்சன், திலீப் குமார், ஷாருக்கான் போன்ற பல இந்தியர்களை இங்கு பாகிஸ்தான் ரசிகர்கள் விரும்புகிறார்கள். அதேபோல் பாகிஸ்தான் வீரர்களான வசீம் அக்ரம், வக்கார் யூனிஸ், சோயிப் அக்தர் போன்ற வீரர்களை இந்தியர்களும் விரும்புகிறார்கள். சேவாக், யுவராஜ் சிங் போன்ற வீரர்களுக்கும் பாகிஸ்தானில் ரசிகர்கள் உள்ளனர். ஆனால் விராட் கோலி இவர்களை எல்லாம் தாண்டி ஒரு படி மேல்தான் பாகிஸ்தான் ரசிகர்கள் அவரை பார்க்கிறார்கள்.