மும்பை : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான அணி அமெரிக்காவிடம் அடைந்த தோல்வியிலிருந்து ரசிகர்கள் இன்னும் மீளாத நிலையில் இந்தியாவுக்கு எதிராகவும் அந்த அணி தோல்வியை தழுவி இருக்கிறது.
இதனால் பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான போட்டி தொடங்குவதற்கு முன் சூரிய குமார் யாதவிடம் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் கமரன் அக்மல் தங்கள் அணிக்கு எதிராக அடிக்க முடியுமா என கேட்டு சவால் விட்டிருந்தார்.

எனினும் சூரிய குமார்யாதவ், நேற்றைய ஆட்டத்தில் ரன் அடிக்கவில்லை என்றாலும் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியது. இந்த நிலையில் வீடியோ ஒன்றில் பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரரும் 2009 டி20 சாம்பியன் ஆன கம்ரான் அக்மல், பாகிஸ்தான் கிரிக்கெட் அழிந்து வருவதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் பாகிஸ்தான் அணியின் மனநிலை கொஞ்சம் கூட மாறவில்லை என்று கடுமையாக சாடினார். தான் விளையாடிய காலத்தில் கடைசி வரை சண்டை போட்டு அணிக்காக வெற்றியை பெற வேண்டும் என்ற உத்வேகம் நிறைந்த அணியில் விளையாடியதாகவும், ஆனால் தற்போது பாகிஸ்தான் அணி மூன்று மாதத்திற்கு ஒரு முறை தான் ஒரு நல்ல செய்தியை ரசிகர்களுக்கு சொல்கிறார்கள்.
மற்ற போட்டிகள் எல்லாம் தோற்கிறார்கள் என்று சாடியிருக்கிறார். இதை தொடர்ந்து பேசிய அவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் அரசியல் மிகவும் விளையாடுகின்றது. தங்களுக்கு தேவையான வீரர்களுக்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள். பிராந்திய கிரிக்கெட் மற்றும் உள்ளூர் தொடர்களை நடத்துவதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிட்டத்தட்ட நிறுத்திவிட்டது.
இதன் மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட் அழிந்து வருகிறது. இந்தியா ஏன் நம்பர் ஒன் அணியாக இருக்கிறது என்று பாருங்கள். அவர்கள் 36 அணிகளை உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் வைத்திருந்தார்கள். தற்போது அதனை 43 ஆக உயர்த்தியிருக்கிறார்கள். இதன் மூலம் திறமை வாய்ந்த வீரர்கள் பலரும் விளையாட வாய்ப்பு கிடைக்கும். ஆனால் இங்கு வெறும் போட்டிகள் நடைபெறுகிறது. தவிர பெரிய அணிகள் அதில் பங்கேற்பதில்லை என்று கம்ரான் அக்மல் சாடி இருக்கின்றார்.