அகமதாபாத்: பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமிற்கு இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தான் கையெழுத்திட்ட இந்திய அணி ஜெர்சியை பரிசாக வழங்கியுள்ளார்.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் பாகிஸ்தான் அணி 42.5 ஓவர்களில் 191 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ், சிராஜ், ஹர்திக், பும்ரா மற்றும் ஜடேஜா உள்ளிட்டோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 30.3 ஓவர்களில் 192 ரன்கள் சேர்த்து வெற்றி இலக்கை எட்டியது. இதில் ரோகித் சர்மா 86 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 53 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலமாக இந்திய அணி புள்ளிப் பட்டியலிலும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. பாகிஸ்தான் அணியின் இந்த தோல்விக்கு அவர்களின் மோசமான பேட்டிங்கே காரணமாக அமைந்துள்ளது.
வெறும் 36 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை பறிகொடுத்ததன் காரணமாகவே பாகிஸ்தான் அணி 191 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதற்கிடையில் ஒரு சிறிய பார்ட்னர்ஷிப்பை அமைத்திருந்தால் கூட பாகிஸ்தான் அணியால் கவுரவமான இலக்கை எட்டியிருக்க முடியும். அதேபோல் அகமதாபாத் மைதான ரசிகர்களும் தொடக்கம் முதல் இறுதி வரை "ஜெய் ஸ்ரீ ராம்" என்ற கோஷத்தை எழுப்பி பாகிஸ்தான் வீரர்களையும் பதற்றமடைய வைத்தனர்.

இந்த போட்டிக்கு பின் விராட் கோலி - பாபர் அசாம் இடையே நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இந்த போட்டிக்கு பின் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமிற்கு தான் கையெழுத்திட்ட ஜெர்சியை விராட் கோலி பரிசாக அளித்தார். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.
இந்திய அணிக்கு எதிரான இந்திய மண்ணில் முதல்முறையாக களமிறங்கிய பாபர் அசாம் 50 ரன்கள் எடுத்து அசத்தினார். ஆனால் அவருக்கு பின் வந்த வீரர்கள் அனைவரும் அட்டாக் செய்ய முயன்று அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இதன் மூலம் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி 8வது முறையாக இந்திய அணியிடம் தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.