கொழும்பு : 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியை சந்திக்க உள்ளது.
சூப்பர் 4 சுற்றில் நடக்கும் இந்தப் போட்டிக்கு முன்னதாகவே பாகிஸ்தான் அணி களமிறங்கப் போகும் அணியை அறிவித்து இருக்கிறது.

போட்டிக்கு ஒருநாள் முன்னதாகவே களமிறங்கப் போகும் 11 வீரர்கள் கொண்ட தன் அணியை அறிவித்து பாகிஸ்தான் சமீப காலமாக கெத்தாக வலம் வருகிறது.
அணி அறிவிப்பு : அந்த வகையில் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னதாக பாகிஸ்தான் அணி அறிவித்துள்ள 11 வீரர்கள் கொண்ட அணியில் கடந்த முறை இந்திய அணிக்கு எதிராக களமிறங்கிய அணியில் இருந்து ஒரு வீரர் மட்டுமே நீக்கப்பட்டு இருக்கிறார்.
மாற்றம் : சுழற் பந்துவீச்சளார் முகமது நவாஸ் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக பாஹீம் அஷ்ரப் அணியில் இடம் பெற்றுள்ளார். இந்த மாற்றம் ஏன் என்பதன் பின்னணியில் தான் இந்திய அணியின் பலவீனத்தை குறி வைக்கும் பாகிஸ்தானின் திட்டம் உள்ளது.
வேகக் கூட்டணி : கடந்த குரூப் சுற்றுப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக 266 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்தப் போட்டியில் இந்திய அணியின் பத்து விக்கெட்களையும் பாகிஸ்தான் அணியின் "வேகக் கூட்டணி" என அறியப்படும் வேகப் பந்துவீச்சாளர்கள் ஷஹீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரௌப் மற்றும் நசீம் ஷா வீழ்த்தி இருந்தனர்.
தடுமாறிய இந்திய அணி : அந்த மூவர் கூட்டணியின் பந்துவீச்சை சந்திக்கவே இந்திய அணி வீரர்கள் தடுமாறினர். இதில் விராட் கோலி, ரோஹித் சர்மா, இருவரும் இடது கை வேகப் பந்துவீச்சாளர் ஆன ஷஹீன் ஷா அப்ரிடியிடம் வீழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதான் திட்டம் : 30 ஓவர்கள் வேகப் பந்து வீச்சுக்கே இந்திய அணி தடுமாறிய நிலையில், 40 ஓவர்கள் வேகப் பந்து வீசினால் இந்திய அணி நிச்சயம் நிலைகுலையும் என்ற திட்டத்தில் தான் பாகிஸ்தான் அணி தில்லாக நான்கு வேகப் பந்து வீச்சாளர்களை களமிறக்க உள்ளது.
பேட்டிங் நிலை இதுதான் : துவக்க வீரர்கள் ரோஹித் சர்மா, சுப்மன் கில் கத்துக்குட்டி நேபாள அணிக்கு எதிராக அரைசதங்கள் அடித்து இருந்தாலும் வலுவான பாகிஸ்தான் அணிக்கு எதிராக அவர்கள் ரன் குவிப்பார்களா? அதே போல, இந்த தொடரில் ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன் தவிர பாகிஸ்தான் அணிக்கு எதிராக அனைத்து வீரர்களும் தடுமாறி விக்கெட்டை இழந்து இருந்தனர். அவர்கள் நான்கு வேகப் பந்துவீச்சாளர்களை சந்தித்து ரன் சேர்ப்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.