கொல்கத்தா: உலகக்கோப்பை தொடரில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் நடைபெற்ற சுவாரஸ்யங்களை வைத்து ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.
நேற்றைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணி சேஸிங் செய்ய முடியாமல் இந்திய அணியிடம் தோல்வியடைந்தது. இதனை வைத்து தலைநகரம் படத்தில் வடிவேலு, "அடிக்கிறவன் ரவுடி இல்லைடா.. என்னைய மாதிரி தில்லா அடி வாங்குறான் பாரு.. அவன்தான் உண்மையான ரவுடி" என்று சொல்லும் வசனத்தை மாற்றி, "டிஃபெண்டிங்-ல மட்டும் ஜெயிக்கிறவன் பெரிய ரவுடி இல்லைடா.. சேஸிங்லயும் ஜெயிக்கிறவன் தான் நிஜமான ரவுடி" என்று இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணியிடம் சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் குபீர் ரகம்.

நேற்றைய ஆட்டத்தில் சச்சின் டெண்டுல்கரின் 49 சதங்கள் சாதனையை விராட் கோலி சமன் செய்தார். இந்த சாதனைக்கு பின் விராட் கோலி பேசுகையில், சச்சினின் சாதனையை எட்டியது எனக்கு மிகப்பெரிய பெருமை. அவர்தான் எப்போதும் என் ஹீரோ. இது மிகவும் உணர்வுப்பூர்வமான தருணம் என்று கூறி இருந்தார். இதனை படையப்பா படத்தில் சிவாஜியை முன் செல்லுமாறு கூறிவிட்டு பின்னால் செல்லும் ரஜினியின் புகைப்படத்தை வைத்து உருவாக்கப்பட்டுள்ள மீம் செண்டிமெண்டல் டச்.

நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி 300 ரன்களை எட்டுமா என்ற ரசிகர்கள் சந்தேகம் எழுப்பி வந்த போது, கடைசி ஓவர்களின் போது களமிறங்கிய ஜடேஜா அதிரடியாக 15 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்தார். அதில் கடைசி ஓவரில் மட்டும் 15 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனை போக்கிரி படத்தில் விஜய் சொல்லும், "எத்தனை ரஜினி படம் பார்த்துருப்போம்" என்ற வசனத்தை மாற்றி, "எத்தனை மேட்ச் கடைசி ஓவர்ல ஃபினிஷ் பண்ணிருப்போம்" என்று ஜடேஜா சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மாஸ் ரகம்.

நேற்றைய ஆட்டத்தில் வெற்றிபெற்றதன் மூலமாக இந்திய அணி 8 வெற்றிகளுடன் 16 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்திய அணி முதலிடத்திலேயே நிறைவு செய்யவுள்ள நிலையில், 4வது இடத்தை பிடிக்கும் அணியுடன் வான்கடே மைதானத்தில் அரையிறுதியில் மோதவுள்ளது. இதனை சந்திரமுகி படத்தில் வடிவேலு, "பில்டிங்கை பார்த்தாலே பீதியா இருக்கே மாப்ள" என்று கூறுவார். அதேபோல் இந்திய ரசிகர்கள், "நாக் அவுட் போட்டிகளை பார்த்தாலே பயமா இருக்கே" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஒவ்வொரு ரசிகரின் மனசாட்சி.

நடப்பு உலகக்கோப்பையில் பவர் பிளே ஓவர்களில் அதிரடி காட்டும் ரோகித் சர்மா, 3 முறை அரைசதத்தை தவறவிட்டுள்ளார். ஆனால் அவரின் அதிரடி காரணமாக பின் வரும் வீரர்கள் எந்த அழுத்தமும் இல்லாமல் விளையாடுகின்றனர். இதனை பாராட்டும் வகையில் மாநாடு படத்தில் எஸ்ஜே சூர்யா, வந்தான்.. சுட்டான்.. ரிப்பீட்டு என்று கூறுவார். அதனை மாற்றி, "வரான்.. பவர்பிளேவை யூஸ் பண்ணிறான்.. அவுட் ஆகுறான்.. ரிப்பீட்டு" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மரண மாஸ்.