கொல்கத்தா: விரா5ட் கோலியின் நிதான ஆட்டம் குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கருத்து தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 326 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக நட்சத்திர வீரர் விராட் கோலி 101 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 77 ரன்களும் விளாசினர்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி வெறும் 83 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. சிறப்பாக பந்துவீசிய ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், முகமது ஷமி மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன் மூலம் இந்திய அணி 8 போட்டிகளில் விளையாடி 8 வெற்றிகளை பெற்று அசத்தியுள்ளது.
இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேசுகையில், கடந்த 3 போட்டிகளில் எங்களின் ஆட்டத்தை கவனித்தவர்களுக்கு, நாங்கள் சூழலுக்கு ஏற்றபடி விளையாடி இருக்கிறோம் என்று புரியும். இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் நாங்கள் அழுத்தத்துடன் விளையாடினோம். நாங்கள் போதிய இலக்கை எட்டிய பின், பவுலர்கள் மிகச்சிறப்பாக விளையாடி வெற்றியை கொடுத்தார்கள். நாங்கள் முதல் ஓவரிலேயே விக்கெட்டை பறி கொடுத்தும், ரன்களை சேர்த்தோம்.
இன்றைய ஆட்டத்தில் விராட் கோலியை சூழலுக்கு ஏற்றபடி கடைசி வரை விளையாட கேட்டுக் கொண்டோம். அதன்பின் பிட்சில் சரியான லெந்தில் வீசினாலே போதும் என்று கண்டுபிடித்ததோடு, சரியாக செயல்பட்டுள்ளோம். ஸ்ரேயாஸ் ஐயரை பொறுத்தவரை நாங்கள் வைத்த நம்பிக்கை அவர் காப்பாற்றாமல் இருந்திருந்தால் கூட, அவர் பிளேயிங் லெவனில் இருந்திருப்பார். நாங்கள் அவரை மீது நம்பிக்கை வைத்துள்ளோம். பெஞ்ச் செய்யப்பட்ட முகமது ஷமி இப்படியொரு கம்பேக் கொடுத்திருப்பதன் மூலம், அவரின் மனநிலை என்ன என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
கடைசி 2 போட்டிகளிலும் ஸ்ரேயாஸ் ஐயரால் என்ன செய்ய முடியும் என்பதை காட்டிவிட்டார். சுப்மன் கில் மற்றும் நானும் இணைந்து அதிக நேரம் பேட்டிங்ஃப் செய்து வருகிறோம். அதனால் முன்கூட்டியே எந்த முடிவையும் எடுக்காமல் எங்களுக்கு தோன்றியபடி தான் விளையாடுகிறோம். ஜடேஜா இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இன்று கடைசி நேரத்தில் களமிறங்கி ரன்களை விளாசியதோடு, உடனடியாக விக்கெட்டையும் வீழ்த்தினார். அவரின் பணி என்னவென்பது அவருக்கு நன்றாக தெரியும். அவர் மீதான எதிர்பார்ப்பும் என்னவென்பது அவருக்கு தெரியும். இன்னும் 2 முக்கியமான போட்டிகள் உள்ளது. அதனால் எந்த மாற்றங்களையும் செய்ய விரும்பவில்லை என்று தெரிவித்தார்.