கொல்கத்தா: உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் ஒரே போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது ஸ்பின்னர் என்ற சாதனையை நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா படைத்துள்ளார்.
உலகக்கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 326 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக நட்சத்திர வீரர் விராட் கோலி 101 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 77 ரன்களும் விளாசினர்.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி வெறும் 83 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. சிறப்பாக பந்துவீசிய ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், முகமது ஷமி மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன் மூலம் இந்திய அணி 8 போட்டிகளில் விளையாடி 8 வெற்றிகளை பெற்று அசத்தியுள்ளது.
இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது விராட் கோலிக்கு வழங்கப்பட்டது. அதேபோல் ஆட்டநாயகன் விருதை பெறும் அளவிற்கு ஜடேஜாவும் சிறப்பாக செயல்பட்டார். பேட்டிங் கடைசி நேரத்தில் களமிறங்கிய ஜடேஜா 15 பந்துகளில் 29 ரன்களையும், பந்துவீச்சில் 9 ஓவர்களில் ஒரு மெய்டன் உட்பட 33 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஜடேஜா 2வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இதற்கு முன்பாக 2013ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 36 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அதேபோல் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சார்பாக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது ஸ்பின்னர் என்ற சாதனையையும் ஜடேஜா படைத்துள்ளார்.
இவருக்கு முன்பாக 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பெங்களூரு மைதானத்தில் நடைபெற்ற அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் யுவராஜ் சிங் 31 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். அவருக்கு பின் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக ஜடேஜா சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.