கொல்கத்தா: இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் 49வது சதம் குறித்து ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா கருத்து தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதல் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 326 ரன்கள் குவித்தது. சிறப்பாக ஆடிய விராட் கோலி 121 பந்துகளில் 101 ரன்களை விளாசி அசத்தினார். அதுமட்டுமல்லாமல் ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த சச்சினின் சாதனையை சமன் செய்தார்.

ஆடுகளம் ரன்கள் சேர்க்க கடினமாக மாறிய நிலையில், விராட் கோலியின் ஆட்டம் சுயநலமாக இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தது. ஆனால் விராட் கோலி சதமடித்த அதே ஆடுகளத்தில் தென்னாப்பிரிக்கா அணியால் மொத்தமாக கூட 100 ரன்களை எடுக்க முடியவில்லை. அப்படியான ஆடுகளத்தில் விராட் கோலி சதமடித்ததால் தான், ஆட்டநாயகன் விருது அவருக்கு வழங்கப்பட்டது.
இதுகுறித்து ஜடேஜா பேசுகையில், இந்த வெற்றியும், சதமும் விராட் கோலிக்கு கொஞ்சம் கூடுதலாக உற்சாகம் அளிக்கும். ஏனென்றால் ஆடுகளம் ரன்கள் சேர்ப்பதற்கு சாதகமானது அல்ல. அவ்வளவு கடினமானது என்பதால் தான் 270 ரன்களே நல்ல ஸ்கோராக பார்க்கப்பட்டது. சரியான நேரத்தில் ஸ்ட்ரைக்கை மாற்றிக் கொண்டே இருந்தார். அதிலும் ஸ்பின்னர்கள் அட்டாக் செய்த போது, ரன்களே வரவில்லை. அப்போதும் சில ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் 300 ரன்களுக்கு மேல் எடுத்து சென்றுள்ளார். அதற்கு நிச்சயம் திறமையும், பயிற்சியும் தேவை.
தென்னாபிரிக்கா அணி பவுலிங் செய்த போது, ஆடுகளத்தில் கூடுதல் உதவி கிடைத்தது. அதிக டர்ன் இருந்ததோடு மட்டுமல்லாமல், பிட்சில் பவுன்ஸும் இல்லை. எனது பார்வையில் தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் செய்த போது, ஓரளவிற்கு ஆடுகளம் பேட்டிங் செய்ய உதவியாக இருந்தது. ஆனால் இந்திய அணி பேட்டிங்கின் போது எக்கச்சக்க டர்ன் இருந்தது. பெரிய ஷாட்களை ஆடவே முடியாது. நிச்சயம் ஸ்பின்னர்களை கவனமாக எதிர்கொண்ட விராட் கோலியை பாராட்டியே ஆக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.