கொல்கத்தா: உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி பவுலர்கள் இணைந்து 8 போட்டிகளில் 75 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
"கிரிக்கெட்டை பொறுத்தவரை பேட்ஸ்மேன்களால் போட்டிகளை தான் வெல்ல முடியும்.. பவுலர்களால் மட்டும் தான் தொடரை வெல்ல முடியும்" என்று பல காலமாக சொல்லப்படுவதுண்டு. இது உண்மையும் கூட. இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகளின் பவுலிங் அட்டாக் பலம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.

ஆனால் அந்த இரு அணிகளை விடவும் இந்திய அணியின் பவுலிங் அட்டாக் வேறு லெவலில் உள்ளது. ஏனென்றால் இந்திய அணி சேஸிங் செய்தாலும் சரி, முதல் பேட்டிங் ஆடினாலும் எதிரணிகள் ஒரு முறை கூட 300 ரன்களை எட்டவில்லை. பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து என்று எந்த அணிகளும் இந்தியாவுக்கு எதிராக 300 ரன்களுக்கு அருகில் கூட வர முடியவில்லை.
இதற்கு இந்திய அணி பவுலர்களின் அபாரமான பந்துவீச்சே காரணமாக அமைந்துள்ளது. இந்திய அணியின் நட்சத்திர பவுலர் முகமது ஷமி 16 விக்கெட்டுகளையும், பும்ரா 15 விக்கெட்டுகளையும், ஜடேஜா 14 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 12 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.
அதேபோல் ஹர்திக் பாண்டியா 5 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாக்கூர் 2 மற்றும் அஸ்வின் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர். 8 போட்டிகளில் மொத்தமாக விளையாடியுள்ள இந்திய அணி, இதுவரை 75 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது. அதாவது 8 போட்டிகளில் ஆடி எதிரணியை சேர்ந்த 5 வீரர்களை மட்டுமே தப்பித்துள்ளனர். அந்த அளவிற்கு பலம் வாய்ந்த பவுலிங் அட்டாக்கை இந்திய அணி கொண்டுள்ளது.
அதில் 5 பவுலர்களுடன் ஆடிய போட்டிகளில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளது. இன்னும் சொல்லப் போனால் குல்தீப் யாதவ் கடந்த 3 போட்டிகளாக முழு ஓவர்களையும் வீசவே இல்லை. இதனால் இந்திய அணிக்கு 6வது பவுலர் அவசியமா என்ற கேள்வியே தேவையில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. இதே ஃபார்மில் சென்றால் நிச்சயம் இந்திய அணி உலகக்கோப்பையை வெல்லும் என்று பார்க்கப்படுகிறது.