ஜோகனஸ்பர்க் : இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று ஜோகனஸ்பர்க் நகரில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் மார்க்கரம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார்.
இது தென்னாப்பிரிக்காவுக்கு சாதகமான டாஸ் ஆக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கடந்த டி20 போட்டி நடைபெற்ற அதே பிட்ச்சில் தான் இன்று முதல் ஒருநாள் போட்டியில் நடைபெறுகிறது. இதன் காரணமாக ஆடுகளம் தோய்வடைய வாய்ப்பு இருக்கிறது.

இதன் மூலம் இரண்டாவதாக பேட்டிங் செய்யும்போது சுழற் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள். பேட்டிங் கொஞ்சம் கடினமாக இருக்கும். இதனை பயன்படுத்திக் கொண்டு முதலில் பேட்டிங் செய்து அதிக ரன்களை குவிக்க தென்னாப்பிரிக்கா முடிவு எடுத்திருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணியில் இன்றைய ஆட்டத்தில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது.
நடுவரிசையில் உலகக்கோப்பை தொடரில் களமிறங்கி வந்த கே எல் ராகுல் தற்போது தொடக்க வீரராக ருத்ராஜுடன் விளையாட இருக்கிறார். இதைப் போன்று தமிழக கிரிக்கெட் வீரர் சாய் சுதர்சன் தன்னுடைய முதல் சர்வதேச போட்டியில் அறிமுகமாக இருக்கிறார். இதேபோன்று திலக் வர்மா, சஞ்சு சாம்சன், அக்சர் பட்டேல் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
டி20 தொடரில் விளையாடாத ஸ்ரேயாஸ் ஐயரும் அணிக்கு திரும்பி இருக்கிறார். எனினும் டி20 தொடரில் சிறப்பாக விளையாடிய ரிங்கு சிங் ஒரு நாள் கிரிக்கெட்டில் அறிமுகமாக போகிறார் என்று செய்திகள் வெளியானது. ஆனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் ஸ்ரேயாஸ் முதல் ஒருநாள் போட்டியில் மட்டும் தான் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் ஸ்ரேயாஸ் ஐயர் இடத்தில் ரிங்கு சிங் எஞ்சிய இரண்டு ஒருநாள் போட்டியில் விளையாடுவார் என தெரிகிறது. இந்த போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள கே எல் ராகுல் தாம் முதலில் பேட்டிங் செய்ய தான் இருந்தேன் என்றும் எங்கள் அணியில் நிறைய இளம் வீரர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். ஆனால் அனைவரும் ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் உள்ளவர்கள்.அவர்கள் இந்திய அணிக்காக விளையாட உள்ளதை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் ராகுல் கூறியுள்ளார்.