ஜோகனஸ்பர்க் : இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 116 ரன்களில் சுருண்டது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் போட்டி ஜோகன்ஸ்பர்க் நகரில் இன்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. பெரிய இலக்கை நிர்ணயித்து இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கும் திட்டத்துடன் தென்னாபிரிக்கா இந்த போட்டியில் எதிர்கொண்டது.

இந்திய தரப்பில் தமிழக வீர சாய் சுதர்சன் இன்றைய ஆட்டத்தில் அறிமுகவீரராக களம் இறங்கினார். ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே முகேஷ் குமார் அபாரமாக பந்துவீசி ரன் ஏதும் கொடுக்காமல் கடும் நெருக்கடி கொடுத்தார். இந்த ஓவரில் ஒரு ஓயிடு மட்டும் தான் சென்றது. இதேபோன்று ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் ஆர்ஸ்தீப் சிங் அபாரமாக பந்து வீசி தென்ஆப்பிரிக்காவை நிலைகுலைய வைத்தார்.
அடுத்தடுத்து இரண்டு விக்கெட் வீழ்த்த தென்னாபிரிக்க அணி மூன்று ரன்கள் சேர்ப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. ரிசா ஹென்றிக்ஸ் மற்றும் வெண்டர் டுசன் ஆகியோர் டக் அவுட் ஆகினர். இதன் பிறகு ஆவேஷ் கான் கைக்கு பந்து சென்றது. அவரும் தனக்கு கொடுத்த வாய்ப்பை கெட்டியாக பயன்படுத்திக் கொண்டார். தென்னாப்பிரிக்காவுக்கு ரன்னே கொடுக்கக் கூடாது என்ற நோக்கத்தில் ஆவேஷ் கான் பந்து வீச அவருக்கு விக்கெட்டுகள் கிடைத்தது.
கேப்டன் ஏய்டன் மார்க்கரம் 12 ரன்களிலும், டேவிட் மில்லர் இரண்டு ரன்களிலும் வியான் முல்டர் டக் அவுட் ஆகியும் கேசவ் மஹராஜ் 4 ரன்களிலும் ஆவேஷ் கான் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தனர். ஆல் ரவுண்டர் ஆண்டில் பிலோக்வாயோ அதிகபட்சமாக 33 ரன்கள் சேர்க்க தென்னாப்பிரிக்க அணி 27.3 ஓவரில் 116 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய பந்துவீச்சில் ஆர்ஸ்தீப் சிங் ஐந்து விக்கெட்டுகளையும் ஆவேஷ் கான் நான்கு விக்கெட்டுகளையும் குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்கள். இந்த மைதானத்தில் தென் ஆப்பிரிக்க அணி கடந்த 11 முறை முதலில் பேட்டிங் செய்து 300 ரன்கள் குவித்த நிலையில் தற்போது 116 ரன்களில் சுருண்டு இருக்கிறார்கள்.