ராஞ்சி: ராஞ்சியில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சிக்ஸர் மழை பொழிந்து சதம் அடித்தார். பொதுவாக ஃபோர் அடிப்பதில் வல்லவரான கோலி, இன்று 'ஹிட்மேன்' ரோஹித் சர்மாவையே மிஞ்சும் அளவுக்கு சிக்ஸர்களைப் பறக்கவிட்டு மைதானத்தை அதிர வைத்தார்.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. இதில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

ஆட்டத்தின் துவக்கத்திலேயே இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 16 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து கேப்டன் ரோஹித் சர்மாவுடன், விராட் கோலி ஜோடி சேர்ந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, நீண்ட நாட்களுக்குப் பின் இந்த ஜோடி மீண்டும் ஒருநாள் போட்டியில் இணைந்ததால் எதிர்பார்ப்பு எகிறியது.
ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இருவரும் தென்னாப்பிரிக்க பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். குறிப்பாக, முதல் 10 ஓவர்களிலேயே இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்களைக் குவித்து அசுர வேகத்தில் ரன் சேர்த்தது.
வழக்கமாக ரோஹித் சர்மா தான் சிக்ஸர்களை விளாசுவார், விராட் கோலி பவுண்டரிகள் மற்றும் ஓடி ரன் எடுப்பதில் கவனம் செலுத்துவார். ஆனால் இந்தப் போட்டியில் கதை தலைகீழானது. ரோஹித் சர்மாவை விட அதிக சிக்ஸர்களை அடித்தார் விராட் கோலி .
கோலி தனது 3-வது சிக்ஸரை அடித்தபோது, தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். இது ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி அடிக்கும் 76-வது அரைசதம் ஆகும். அரைசதம் அடித்த கையோடு, அடுத்த பந்திலேயே மீண்டும் ஒரு இமாலய சிக்ஸரை விராட் கோலி பறக்கவிட்டார்.
பொதுவாக அடுத்தடுத்து சிக்ஸர் அடிப்பது விராட் கோலியின் வழக்கமான பாணி கிடையாது. ஆனால், இன்றைய போட்டியில் அவர் டி20 பாணி அதிரடிக்கு திரும்பியிருப்பது ரசிகர்களைக் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது. ரோஹித் சர்மா 51 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின்னும் கோலி தனது வேகம் குறையாமல் ரன் குவித்தார்.
32வது ஓவரில் தனது 52வது ஒருநாள் சதத்தை கடந்தார் விராட் கோலி. அதன் பின்னரும் சிக்ஸ், ஃபோர் என வெளுத்த கோலி, 120 பந்துகளில் 135 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 11 ஃபோர் மற்றும் 7 சிக்ஸர்களை அடித்து இருந்தார். விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் ஒரே இன்னிங்ஸில் 7 சிக்ஸர்களை அடிப்பது இது இரண்டாவது முறை ஆகும்.