கட்டாக்: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியின் விளிம்பில் உள்ளது. ஹர்திக் பாண்டியாவின் அதிரடி அரைசதம் மற்றும் ஜஸ்பிரித் பும்ராவின் மிரட்டலான பந்துவீச்சு ஆகியவை இந்திய அணியின் ஆதிக்கத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தன.
குறிப்பாக, இந்தப் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு இமாலய சாதனையைப் படைத்து வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

கட்டாக்கில் நடைபெற்ற இப்போட்டியில் 3 ஓவர்கள் வீசிய பும்ரா, 17 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் கேசவ் மகாராஜ் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்தியப் பந்துவீச்சாளர் என்ற பெருமையை அவர் பெற்றார். முதல் இடத்தில் அர்ஷ்தீப் சிங் உள்ளார்.
அதுமட்டுமின்றி, கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும் - டெஸ்ட், ஒருநாள், டி20யில் - தலா 100 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய பந்துவீச்சாளர்களின் பட்டியலில் பும்ரா இணைந்துள்ளார். இந்தச் சாதனையை நிகழ்த்தும் முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தான் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக டாஸ் தோற்று பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ஆரம்பம் சரியாக அமையவில்லை. சுப்மன் கில் (4), கேப்டன் சூர்யகுமார் யாதவ் (12) ஆகியோர் லுங்கி இங்கிடியின் பந்துவீச்சில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அபிஷேக் சர்மா 17 ரன்களில் வெளியேறினார்.
அணி இக்கட்டான நிலையில் இருந்தபோது களமிறங்கிய ஹர்திக் பாண்டியா, தென்னாப்பிரிக்க பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். வெறும் 28 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 59 ரன்கள் குவித்தார். அவருக்குத் துணையாகத் திலக் வர்மா (26), அக்சர் படேல் (23) ஆகியோர் கை கொடுக்க, இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் குவித்தது.
176 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய தென்னாப்பிரிக்காவுக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரிலேயே டி காக்கை (0) அர்ஷ்தீப் சிங் வெளியேற்றினார். தொடர்ந்து ஸ்டப்ஸ் (14), மார்க்ரம் (14) என வரிசையாக விக்கெட்டுகள் விழுந்தன.
டெவால்ட் பிரேவிஸ் மட்டும் 22 ரன்கள் எடுத்துப் போராடினார். ஆனால் அவரும் பும்ராவிடம் வீழ்ந்தார். வருண் சக்கரவர்த்தி மற்றும் அக்சர் படேல் ஆகியோரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
12.3 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து வெறும் 74 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வி அடைந்தது. இந்திய அணி 101 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.