நியூலாண்ட்ஸ்: இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா அணி சிராஜின் வேகத்தில் வெறும் 55 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கேப் டவுன் மைதானத்தில் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் டீன் எல்கர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்த போட்டியுடன் எல்கர் ஓய்வு பெறவுள்ளதால், தென்னாப்பிரிக்கா அணி மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று பார்க்கப்பட்டது.

இதன்பின் தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் எல்கர் - மார்க்ரம் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இந்திய அணி தரப்பில் பும்ரா முதல் ஓவரை வீசினார். தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர் மார்க்ரம் 2 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து டீன் எல்கர் 4 ரன்களில் போல்டாகி வெளியேறினார். பின்னர் வந்த அறிமுக வீரர் ஸ்டப்ஸை 3 ரன்களில் பும்ரா வெளியேற்ற, தொடர்ந்து பும்ரா வேகத்தில் சோர்சியும் 2 ரன்களில் வெளியேறினார்.
இதனால் தென்னாப்பிரிக்கா அணி 15 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் வந்த பெடிங்ஹாம் - வெரைன் கூட்டணி நிதானமாக ஆடியது. சில பவுண்டரிகளை விளாசிய நிலையில், பும்ரா - சிராஜ் இருவரும் 12 ஓவர்கள் வரை வீசினர். இதன்பின் பிரசித் கிருஷ்ணா 13வது ஓவரை வீசிய நிலையில், 14வது ஓவரை வீச மீண்டும் சிராஜ் அழைக்கப்பட்டார். இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதன் பலனாக பெடிங்ஹாம் 12 ரன்களிலும், யான்சன் டக் அவுட்டாகியும் சிராஜ் பந்துவீச்சில் வெளியேறினர்.
இதனால் தென்னாப்பிரிக்கா அணி 34 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில், அடுத்த வந்த வீரர்களில் யாரும் ஒற்றை இலக்கை தாண்டவில்லை. டெய்லண்டர்களை முகேஷ் குமார் எளிதாக வீழ்த்தி வெளியேற்றினார். இறுதியாக தென்னாப்பிரிக்கா அணி 55 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இந்திய அணி தரப்பில் சிராஜ் 6 விக்கெட்டுகளையும், பும்ரா மற்றும் முகேஷ் குமார் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணிக்கு எதிராக அடிக்கப்பட்ட குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும். அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்கா அணி அடித்த குறைந்தபட்ச ஸ்கோர் இதுதான். வெறும் 2 மணி நேரத்தில் தென்னாப்பிரிக்கா அணியை இந்திய அணி பவுலர்கள் சுருட்டியது ரசிகர்களிடையே பாராட்டை பெற்று வருகிறது.