நியூலாண்ட்ஸ்: இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி கொடுத்த ஐடியா காரணமாக தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் எல்கர் மற்றும் ஸ்டப்ஸ் இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கேப் டவுன் மைதானத்தில் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் டீன் எல்கர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்த போட்டியில் இந்திய அணி தரப்பில் ஷர்துல் தாக்கூர் மற்றும் அஸ்வின் இருவரும் நீக்கப்பட்டு முகேஷ் குமார் மற்றும் ஜடேஜா இருவரும் இடம்பிடித்தனர்.

அதேபோல் தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் ஸ்டப்ஸ், மகாராஜ் மற்றும் இங்கிடி உள்ளிட்ட 3 வீரர்கள் அணிக்கு வந்துள்ளனர். இதன்பின் தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் டீன் எல்கர் - மார்க்ரம் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இந்திய அணி தரப்பில் முதல் ஸ்பெல்லை பும்ரா - சிராஜ் கூட்டணி வீசியது.
அதில் சிராஜ் வீசிய 4வது ஓவரிலேயே ஜெய்ஸ்வாலின் அபாரமான கேட்ச் காரணமாக மார்க்ரம் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து கடந்த போட்டியில் இந்திய அணியை சோதித்த எல்கர் - சோர்சி கூட்டணி இணைந்தது. அப்போது சிராஜ் மற்றும் பும்ரா இருவரும் ஷார்ட் பால்களை கொண்டு அட்டாக் மேல் அட்டாக் செய்தனர். அப்போது எல்கர் இவர்களின் ஷார்ட் பால்களை எளிதாக சமாளித்து வந்தார்.
பும்ரா வீசிய ஓவரில் எளிதாக ஷார்ட் பால்களை சமாளித்த போது, நேராக ரோகித் சர்மாவிடம் வந்த விராட் கோலி புது யோசனை ஒன்றை கூறினார். விராட் கோலி கூறி சென்ற பின் உடனடியாக ரோகித் சர்மா ஹெல்மெட்டை அணிந்து கொண்டு ஃபிளிக் ஷாட் அடித்தால் கேட்ச் பிடிக்க தயாராக இருக்கும் வகையில், ஷார்ட் லெக் பகுதியில் இருந்து சில அடிகள் பின் நகர்ந்து நின்றார்.
இதனால் எல்கர் இடது பக்கம் ஷாட் அடிக்க முடியாமல் தடுக்கப்பட்டது. இதனால் வலது பக்கம் ஷாட் ஆட முயன்ற போது, சிராஜ் வீசிய பந்து ஸ்டம்பில் அடித்து சென்றது. இதனால் முதல் போட்டியில் சதமடித்து இந்திய அணிக்கு எமனாக அமைந்த எல்கர், 4 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அறிமுக வீரர் ஸ்டப்ஸ், அதே இடத்தில் ஃபீல்டிங் செய்த ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் விராட் கோலியின் ஐடியா இந்திய அணிக்கு சாதகமாக அமைந்ததாக பாராட்டப்பட்டு வருகிறது.