கேப் டவுன் : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் பும்ரா அபாரமாக செயல்பட்டு ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 55 ரன்கள் ஆட்டம் இழக்க இந்திய அணி 153 ரன்கள் எடுத்தது.
இதனை அடுத்து 98 ரன்கள் பின்தங்கிய நிலையில் தென்னாப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸில் களம் இறங்கியது. இரண்டாவது இன்னிங்ஸிலும் தென்னாப்பிரிக்க வீரர்கள் தடுமாறினர். எனினும் முன்பை விட கொஞ்சம் பொறுப்பான ஆட்டத்தை தென்னாப்பிரிக்கா வெளிப்படுத்தியது.

குறிப்பாக தொடக்க வீரர் மார்க்கரம் மட்டும் அபாரமாக நின்று விளையாடி வர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். 62 ரன்களுக்கு மூன்று விக்கெட் என்ற ஸ்கோர் உடன் தென்னாபிரிக்க அணி இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. அப்போது பும்ரா அபாரமாக பந்துவீசி அடுத்தடுத்து விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதன் மூலம் தென்னாபிரிக்க அணி 111 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்து தடுமாறியது. இந்த நிலையில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி பும்ரா புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறார். அதன்படி தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய SENA நாடுகளில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில் பும்ரா தற்போது இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
அணில் கும்ப்ளே, இஷாந்த் சர்மா, பிசன் சிங் பேடி, பிரசன்னா ஆகியோர் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்த நிலையில் தற்போது அவர்களை பும்ரா முறியடித்து இருக்கிறார். இதன் மூலம் ஜாகீர் கான், சந்திரசேகர் ஆகியோரின் சாதனையை பும்ரா சமன் செய்துள்ளார். முதல் இடத்தில் கபில்தேவ் ஏழு முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று சர்வதேச கிரிக்கெட்டில் பும்ரா சொந்த மண்ணில் ஒரே ஒரு முறை தான் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். ஆனால் இந்தியாவை தவிர வெளிநாடுகளில் 10 முறை 5 விக்கெட்டுகளை பும்ரா கைப்பற்றி இருக்கிறார்.