கேப் டவுன் : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபாரமாக பந்து வீசியது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் டெஸ்டில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது.
இந்த நிலையில் புத்தாண்டில் இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் இன்று தொடங்கியது. இந்த தொடரை சமன் செய்ய வேண்டும் என்றால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெல்ல வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறது.

இந்த நிலையில் முதல் டெஸ்டில் செய்த தவறை இம்முறை இந்திய அணி சரி செய்து இருக்கிறது. டாசை இழந்தாலும் முதலில் பந்து வீசும் போது இந்திய அணி வீரர்கள் ஆக்ரோஷமாக செயல்பட்டனர். இந்திய வீரர்களின் பவுலிங்கை தொட கூட முடியாமல் தென்னாப்பிரிக்கா வீரர்கள் தடுமாறினர். இதே போன்று ரோகித் சர்மாவும் ஆக்ரோஷமான கேப்டனாக இன்று செயல்பட்டார்.
இந்திய அணியின் தலைச்சிறந்த இரண்டு பவுலர்களான பும்ரா மற்றும் சிராஜை வைத்து அட்டாக்கிங் பில்டிங்கையும் செட் செய்தார். தொடக்க வீரர் எய்டன் மார்க்கிரம் இரண்டு ரன்களில் வெளியேற கேப்டன் டீன் எல்கர் சிராஜ் பந்துவீச்சில் போல்ட் ஆகி திரும்பினார்.இதேபோன்று தன்னுடைய அறிமுக டெஸ்டில் களமிறங்கிய ஸ்டப்ஸ் பும்ரா பந்துவீச்சில் ஷார்ட் லெகில் நின்ற ரோகித் சர்மாவிடம் கேட்ச் ஆனார். இதேபோன்று முதல் டெஸ்டில் அபாரமாக விளையாடிய டொனி டி சோர்ஸி சிராஜ் பந்துவீச்சின் இரண்டு ரன்களில் வெளியேறினார்.
இதன் மூலம் தென்னாப்பிரிக்க அணி 15 ரன்கள் சேர்ப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன் மூலம் முதல் டெஸ்ட்டில் அடைந்த தோல்விக்கு இரண்டாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்காவிற்கு இந்தியா கடும் பதிலடி கொடுத்திருக்கிறது. இந்த நிலையில் தென்னாபிரிக்கா 55 ரன்னுக்குள் முதல் இன்னிங்ஸில் சுருண்டது. முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மதிய நேர இடைவேலைக்கு முன்பே தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.. கேப் டவுன் டெஸ்டில் இதுவரை இந்திய அணி வெற்றி பெற்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு அணியை இவ்வளவு குறைந்த இலக்கில் இந்தியா சுருட்டியது இது தான் முதுல் முறையாகும்.மேலும் தென்னாப்பிரிக்காவின் 125 ஆண்டுக் கால வரலாற்றில் தங்களது சொந்த மண்ணில் அடித்த குறைந்த ஸ்கோர் இதுவாகும்.