நியூலாண்ட்ஸ்: ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் எப்படி இலங்கை அணியை ஒற்றை ஆளாக சிராஜ் சோலியை முடித்தாரோ, அதேபோல் இன்றைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா பேட்ஸ்மேன்களை கலங்கடித்து வருகிறார்.
ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் முகமது சிராஜ் 7 ஓவர்களில் வெறும் 21 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். முகமது சிராஜின் வாழ்நாளில் மிகச்சிறந்த ஸ்பெல்லாக அன்றைய ஆட்டம் அமைந்தது. அதேபோல் 7 ஓவர்கள் தொடர்ச்சியாக வீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தியது ரசிகர்களையே மிரள வைத்தது.

இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி களமிறங்கியது. முதல் போட்டியில் இந்திய படுதோல்வியை சந்தித்ததால், 2வது டெஸ்ட் போட்டியில் பதிலடி கொடுக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்த நிலையில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் டீன் எல்கர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதன்பின் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. முகமது சிராஜ் வீசிய 4வது ஓவரிலேயே மார்க்ரம் 2 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து டீன் எல்கர் ஃபிளிக் ஷாட் அடிப்பதை தடுக்க ஷார்ட் லெக் ஃபீல்டிங் வைக்கப்பட்டது. அதற்கேற்ப சிராஜ் பந்துவீசி எல்கரை போல்டாக்கி 4 ரன்களில் வெளியேற்றினார்.
தொடர்ந்து மீண்டும் சிராஜ் வீசிய பந்தில் அறிமுக வீரர் ஸ்டப்ஸ் ஷார்ட் லெக்கில் கேட்ச்சாகி வெளியேற, தென்னாப்பிரிக்கா அணி 15 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் பெடிங்ஹாம் - வெரைன் இருவரும் சிறிது நேரம் தாக்கு பிடிக்க, பும்ரா - சிராஜ் இருவரும் 12 ஓவர்கள் வரை வீசினார். இதன்பின் பிரசித் கிருஷ்ணா 13வது ஓவரில் அட்டாக்கில் வந்தார். அப்போது 14வது ஓவரை வீச முகேஷ் குமார் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முகமது சிராஜ் மீண்டும் அட்டாக்கில் வந்தார்.
தொடர்ந்து 8வது ஓவரையும் சிராஜ் வீசிய நிலையில், தென்னாப்பிரிக்கா அணியின் பெடிங்ஹாம் 12 ரன்களிலும், மார்கோ யான்சன் டக் அவுட்டாகியும் வெளியேறினர். இதன் மூலம் சிராஜ் 5வது விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். தொடர்ந்து 9வது ஓவரையும் சிராஜ் வீசிய நிலையில், வெரைன் 15 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். கிட்டத்தட்ட ஒரு செஷன் முழுவதும் சிராஜ் பந்துவீசியுள்ளதால் ரசிகர்கள் மிரண்டு போய் பாராட்டி வருகின்றனர்.