விசாகப்பட்டினம்: கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் படைத்திருந்த மிகப்பெரிய உலக சாதனையை, விராட் கோலி முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை 'தொடர் நாயகன்' விருது வென்ற வீரர் என்ற இமாலய சாதனையை கோலி தன்வசப்படுத்தியுள்ளார்.
விசாகப்பட்டினத்தில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுத் தொடரைக் கைப்பற்றியது. இந்தத் தொடரில் அபாரமாக விளையாடிய விராட் கோலிக்குத் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.

இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒருநாள், டி20 சேர்த்து) அதிக முறை தொடர் நாயகன் விருது வென்றவர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கர் (19 முறை) வைத்திருந்தார். தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடரில் விராட் கோலி தனது 20-வது தொடர் நாயகன் விருதை வென்று, சச்சினின் நீண்ட கால சாதனையைத் தகர்த்தெறிந்துள்ளார்.
இதன் மூலம், சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் 20 முறை இந்த விருதை வென்ற உலகின் முதல் மற்றும் ஒரே வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.
விராட் கோலி (இந்தியா) - 20 முறை*
சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) - 19 முறை
ஷகிப் அல் ஹசன் (வங்கதேசம்) - 17 முறை
ஜாக் காலிஸ் (தென்னாப்பிரிக்கா) - 14 முறை
சனத் ஜெயசூர்யா (இலங்கை) - 13 முறை
இந்தத் தொடரில் விராட் கோலி ஆடிய விதம் அனைவரையும் மிரள வைத்தது. அவர் மூன்று போட்டிகளில் 302 ரன்கள் குவித்தார். 2 சதங்கள் மற்றும் ஒரு அரைசதம் அடித்தார். அவரது சராசரி 151 என்பதாக உள்ளது. ராஞ்சி மற்றும் ராய்ப்பூர் போட்டிகளில் சதம் அடித்த அவர், விசாகப்பட்டினத்தில் ஆட்டமிழக்காமல் 65 ரன்கள் குவித்து அணியை வெற்றி பெற வைத்தார்.
விருது பெற்ற பிறகு பேசிய கோலி, "உண்மையைச் சொல்லப்போனால், இந்தத் தொடரில் நான் ஆடிய விதம் எனக்கு மிகுந்த மனநிறைவை அளித்துள்ளது. கடந்த 2-3 ஆண்டுகளாக நான் இந்த அளவுக்குச் சிறப்பாக ஆடவில்லை என்று நினைக்கிறேன். இப்போது மனதளவில் மிகவும் சுதந்திரமாக உணர்கிறேன். ஆட்டம் எனக்குச் சாதகமாக அமைந்தது மகிழ்ச்சி" என்றார்.
எது சிறந்த இன்னிங்ஸ் என்று கேட்டதற்கு, "ராஞ்சி இன்னிங்ஸ் தான் எனக்கு ஸ்பெஷல். ஆஸ்திரேலியா தொடருக்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின் ஆடினேன். அந்தப் போட்டியில் நான் ஆடிய விதம், எனக்குள் இருந்த பழைய நெருப்பை மீண்டும் பற்ற வைத்தது" என்று குறிப்பிட்டார். அடுத்ததாக விராட் கோலி விஜய் ஹசாரே டிராபியில் விளையாட திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.