அகமதாபாத்: அகமதாபாத் மைதானத்தில் எதிர்பார்க்காத அதிரடி ஆட்டத்தை ஆடினார் ஹர்திக் பாண்டியா. வெறும் 7 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர், அதில் 31 ரன்களை விளாசி தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்களை நிலைகுலையச் செய்தார். சூர்யகுமார் யாதவ் சொற்ப ரன்களில் வெளியேறியதும், சோர்ந்து போயிருந்த இந்திய ரசிகர்களுக்கு, ஹர்திக் பாண்டியாவின் இந்த ஆட்டம் மிகப்பெரிய உற்சாகமாக அமைந்தது.
இந்தப் போட்டியில் டாஸ் தோற்று இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. கேப்டன் சூர்யகுமார் யாதவ் சமீப காலமாக வேகப்பந்து வீச்சுக்கு எதிராக திணறி வருகிறார். இன்றும் கார்பின் போஷ் பந்துவீச்சில் வெறும் 5 ரன்களுக்கு கேட்ச் ஆகி வெளியேறினார். 12.1 ஓவரில் இந்தியா 131 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து இருந்தது. அப்போது தான் களத்திற்குள் நுழைந்தார் ஹர்திக் பாண்டியா.

வந்த முதல் பந்திலேயே கார்பின் போஷ் பந்துவீச்சை எதிர்கொண்ட ஹர்திக், இறங்கி வந்து ஒரு மிட்-ஆஃப் சிக்ஸர் அடித்தார். அவர் அடித்த வேகத்தில் பந்து நேராக பவுண்டரி லைனுக்கு வெளியே இருந்த கேமராமேன் கையில் பலமாகத் தாக்கியது. உடனடியாக அவருக்கு ஐஸ் ஒத்தடம் கொடுக்கப்பட்டது. ஹர்திக் பாண்டியாவின் ஆக்ரோஷம் அங்கேயே தொடங்கிவிட்டது.
ஆட்டத்தின் 14வது ஓவரை ஜார்ஜ் லிண்டே வீசினார். இந்த ஓவர் தான் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. அந்த ஓவரில் மட்டும் 27 ரன்கள் விளாசப்பட்டது. முதல் பந்தில் திலக் வர்மா ஒரு சிக்ஸர் அடித்தார். இரண்டாவது பந்தில் சிங்கிள் எடுத்தார் திலக் வர்மா. மூன்றாவது பந்தில் ஹர்திக் பாண்டியா ஒரு பவுண்டரி அடித்தார்.
நான்காவது பந்தில் பேக்-ஃபூட்டில் நின்று கவர் திசையில் ஒரு இமாலய சிக்ஸர் அடித்தார். ஐந்தாவது பந்தில் மிட்-விக்கெட்டில் பந்தை பார்க்காமலே அடித்த அந்த ஷாட் எக்குத்தப்பாக இருந்தது. அடுத்து அந்த ஓவரின் கடைசி மற்றும் ஆறாவது பந்தில் மீண்டும் கவர் திசையில் ஒரு பவுண்டரி அடுத்தார் ஹர்திக் பாண்டியா.
இந்த ஒரே ஓவரில் ஹர்திக் பாண்டியா 20 ரன்களை விளாசினார். அந்த ஓவர் முடிவில் அவர் வெறும் 7 பந்துகளில் அவர் 31 ரன்கள் (3 சிக்ஸர், 3 பவுண்டரி) குவித்து, 442 ஸ்ட்ரைக் ரேட்டில் மிரட்டினார். அதன் பின்னரும் ஹர்திக் பாண்டியா அதிரடி ஆட்டம் ஆடி 16 பந்தில் அரைசதம் கடந்தார்.
கௌதம் கம்பீர் பயிற்சியாளராக வந்த பிறகு, ஹர்திக் பாண்டியா மீதான அழுத்தம் அதிகரித்திருந்தது. இந்த தொடரின் இரண்டாவது போட்டியில் ஹர்திக் பாண்டியா அதிரடி ஆட்டம் ஆடி அணியை வெற்றி பெற வைத்தார். ஆனால், மூன்றாவது போட்டியில் நிதான ஆட்டம் ஆடி அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தார். அதனால், போட்டி முடிந்த உடன் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அவருடன் வாக்குவாதம் செய்த காட்சிகள் வெளியாகி இருந்தன.
ஆனால், "நான் எப்போதுமே பழைய ஹர்திக் தான்" என்பதை இந்த அதிரடி ஆட்டம் மூலம் நிரூபித்துள்ளார். விமர்சனங்களுக்கு வாயால் பதில் சொல்லாமல், தனது பேட் மூலம் சரவெடியாக பதில் அளித்துள்ளார் பாண்டியா. சூர்யகுமார் அவுட்டான பிறகு இடிந்து போயிருந்த ரன் ரேட்டை, இந்த ஒரே ஓவரின் மூலம் ஜெட் வேகத்தில் உயர்த்தி ஹர்திக் மிரட்டி இருக்கிறார்.
இந்திய அணி 232 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில் தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதை அடுத்து இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேட்டிங்கில் பட்டையைக் கிளப்பிய பாண்டியா, பந்துவீச்சில் 1 விக்கெட் வீழ்த்தினார்.