கொல்கத்தா: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையில், இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர் கண்ணீருடன் தலையில் கை வைத்திருக்கும் புகைப்படம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்திய அணியின் வெற்றிக்கு 124 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இந்திய அணி பேட்ஸ்மேன்களின் பொறுப்பில்லாத ஆட்டம் காரணமாக வெறும் 93 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.

இந்தப் போட்டியில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் நம்பர் 3 பேட்ஸ்மேனாக சேர்க்கப்பட்டிருந்தார். ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருந்ததோடு, பேட்டிங்கிற்கு சவாலாக இந்த பிட்ச் இருந்தது. ஆனாலும் வாஷிங்டன் சுந்தர் தன்னுடய டிஃபென்ஸ் டெக்னிக்கை முழுமையாக வெளிப்படுத்தி இருக்கிறார். முதல் இன்னிங்ஸில் 82 பந்துகளை எதிர்கொண்டு 29 ரன்களை எடுத்திருந்தார்.
அதேபோல் 2வது இன்னிங்ஸில் தனியாளாக போராடிய வாஷிங்டன் சுந்தர் 92 பந்துகளை எதிர்கொண்டு 2 பவுண்டரிகள் உட்பட 31 ரன்களை விளாசினார். 2வது இன்னிங்ஸில் வேறு எந்த இந்திய பேட்ஸ்மேனும் 35 பந்துகளை கூட எதிர்கொள்ளவில்லை. அதேபோல் ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தருக்கு 2வது இன்னிங்ஸில் பவுலிங் கொடுக்கப்படவே இல்லை.
முதல் இன்னிங்ஸில் 1 ஓவர் மட்டுமே வீசி இருந்தார். ஆனாலும் பேட்டிங்கில் சிறந்த பங்களிப்பை வாஷிங்டன் சுந்தர் வழங்கி இருக்கிறார். 2வது இன்னிங்ஸில் கடுமையாக போராடிய வாஷிங்டன் சுந்தர், ஸ்பின்னர்களை பிட்ச் ஆஃப் தி பாலுக்கு சென்று விளையாடி ஒரு கிளாசிக் ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
சிராஜ் விக்கெட் வீழ்த்தப்பட்ட போது ஓய்வறையில் இருந்த வாஷிங்டன் சுந்தர் தலையை குனிந்தவாறு சில நிமிடங்கள் கண்ணீர் சிந்தார். அதன்பின் முகத்தை காட்டிய போது கண்ணீருடன் வாஷிங்டன் சுந்தர் சோகம் அடைந்தது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வரும் காலங்களில் வாஷிங்டன் சுந்தர் பெரிய இன்னிங்ஸை ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.